ஜனநாயக ஆட்சிக்காக ஒன்றிணையுங்கள்

மைத்திரி-மகிந்தவை அதிரவைத்த ‘உத்தரவு’


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா புதிய பிரதமராக மஹிந்த ராஜ பக்ஷவை நியமித்து ஆரம்பித்து வைத்த அக்டோபர்26 ஆட்சி மாற்றத்தின் பின்னர் மூன்று வாரங்கள் கடந்திருக்கும் நிலையிலும் அந்த ஆட்சியானது நிலைபேறான ஒரு அங்கீகாரத்தை உள்ளூரிலும் சரி சர்வதேச ரீதியாகவும் சரி பெற்றுக்கொள்வதற்கு தவறியுள்ளது.

அக்டோபர் 26 இரவில் இலங்கை அரசியலில் பலவந்தமாகவும் தன்னிச்சையாகவும் மைத்திரிபால சிறிசேனாவால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்த மாற்றமானது நாட்டில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்திருக்கின்றது.

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கான விவாதங்கள் நடைபெற வேண்டிய இந்த கால கட்டத்தில் பாராளுமன்றத்தை மூடுவதும் திறப்பதுமாக அரசின் சித்து விளையாட்டுக்கள் காணப்படுகின்றன.

கடந்த அக்டோபர் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியினர் கூட்டணி அரசாங்கத்துடனான பிணைப்பினை முறித்துக்கொண்ட நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா எதேச்சதிகாரமாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்திருந்தார்.

இந்த நகர்வினை சற்றிலும் எதிர்பாத்திருக்காத பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தானே நாட்டின் சட்ட ரீதியான பிரதமர் என்று கூறி தொடர்ந்தும் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இருந்து வருகிறார். முன்னர் அவருக்கான பாதுகாப்பினை மிகவும் குறைந்த மட்டத்தில் அரசாங்கம் வழங்கியிருந்தது ஆனால் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியினரின் கோரிக்கைக்கு அமைவாக பாதுகாப்பு நடவடிக்கைகள் சற்று அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆட்சி மாற்றத்தின் பின்னர் நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை பரவலாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதனை மேலும் தீவிரமடையச்செய்யும் வகையில் ஜனாதிபதியால் பாராளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் கடுமையான அழுத்தத்தின் காரணமாக அதற்கு முன்னதாக பாராளுமன்றை கூட்டுவதற்கான நடவடிக்கையை ஜனாதிபதி முன்னெடுக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டிருந்தாலும் இந்த விடயத்தில் குழப்பமான நிலைப்பாடுகளே காணப்பட்டிருந்தன. சரியான ஒரு திகதி இந்த விடயத்தில் அறிவிக்கப்பட்டிருகவில்லை.

சபாநாயகர் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான அதிகாரம் தனக்கு இருப்பதாகக் கூறினார். ஆனால் அதற்கு இடமளிக்கப்போவதில்லையென ஆளும் தரப்பு கடுமையான பிடிவாதத்துடன் காணப்பட்டது. இந்த முரண்பாடுகள் தீவிரமடையும் நிலையில் மைத்திரிபால சிறிசேனா தனது மற்றொரு ஆட்டத்தை காண்பித்திருந்தார். ஆம், ஏற்கனவே அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்த பாராளுமன்றத்தை தான் கலைப்பதாக நவம்பர் ஒன்பதாம் திகதி மற்றொரு வெள்ளிக்கிழமை இரவு திடீர் அறிவிப்பினை விடுத்திருந்தார்.

இந்த அறிவிப்பு ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கட்சிகளுக்கு மட்டுமல்லாமல் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளில் அங்கம் வகிக்கும் சகல தரப்பினருக்கும் பெரும் அதிர்ச்சியாக அமைந்திருக்கும் நிலையில் பொதுமக்கள் மத்தியில் மைத்திரி மஹிந்த தரப்பு மிகவும் கடுமையான எதிர்ப்பினை சம்பாதிப்பதற்கு ஏதுவான விடயமாக அது அமைந்து விட்டது.

ஏனென்றால் ஆளும் தரப்பினர் இந்த விடயத்தால் தமது புதிய அமைச்சு பதவிகளை விரைவில் இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். அத்துடன் இவர்களின் வாக்குறுதிகளை நம்பி ஐக்கிய தேசிய கட்சியின் வசமிருந்து மற்றைய பக்கம் தாவியவர்களுக்கு இரண்டும் கெட்ட நிலைஏற்பட்டிருந்தது.

ஆனால் இந்தப் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட விவகாரம் ஐக்கிய தேசிய கட்சியினருக்கும் அவர்கள் சார்ந்த ஏனைய கட்சிகளுக்கும் மக்களின் ஆதரவை மேலும் பெறுவதற்கான ஒரு காரணியாக அமைந்திருந்த அதேவேளை மஹிந்த மைத்திரி தரப்பினர் சபையில் தமது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு முடியாத நிலை ஏற்பட்டதன் விளைவாகவே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது என்பது தான் யதார்த்தம் .

ஏனென்றால் பாராளுமன்றத்தில் மொத்தம் 225 உறுப்பினர்கள். பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை. ராஜபக்ஷ, சிறிசேனா கூட்டணிக்கு 104 உறுப்பினர்கள் மாத்திரமே அதுவரை கிடைத்துள்ளனர். மேலும் உறுப்பினர்களை தம் வசம் பெற்றுக்கொள்வதற்கு மிகவும் கடுமையான முயற்சிகளை ஆளும் தரப்பு மேற்கொண்டிருந்தும் அதனை பெறமுடியாததன் விளைவாக பாராளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தல்களை நடாத்துவதற்கான திகதியையும் அறிவித்து விடுகிறார் ஜனாதிபதி.

ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்காக திடீர் நகர்வுகளை மேற்கொன்ட ஜனாதிபதி இங்கு தவறிழைத்துவிடார். அவரது பாராளுமன்றைக் கலைக்கும் அறிவிப்பு அவர்களால் ஆட்சியை தொடர்ந்து தக்கவைக்கத்துக்கொள்ள முடியாது என்பதனை மிகவும் வெளிப்படையாகக் காண்பித்திருந்தது.

இங்கு ஆரம்பிக்கின்றது ஐக்கிய தேசிய கட்சியினரின் இராஜதந்திர நகர்வுகள். பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க நீக்கப்பட்டமைக்கு எதிராக இதுவரையில் நீதிமன்றத்தை நாடியிருக்காத ஐக்கிய தேசிய கட்சி இந்த பாராளுமன்றம் கலைக்கப்படும் முடிவுக்கு எதிராக உயர் நீதி மன்றத்தை நாடுவதற்குத் தீர்மானித்திருந்தது.

அத்துடன் இந்த விடயத்தில் நம்மவர்களின், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஐக்கிய தேசிய கட்சியின் பின்னணியுடன் பாராளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரனால் கூட்டமைப்பின் சார்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அவருடன் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிரேஸ்ட சட்டத்தரணி சுரேன் பெர்னான்டோ , நிரான் அங்கிரெல் ஆகியோர் இணைந்திருந்தனர்.

இதேவேளை ஐக்கியதேசிய கட்சி சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி திலக் மாரப்பனவால் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இவர்களுடன் முஸ்லீம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒருவரான பேராசிரியர் ராஜன் கூல் உட்பட்ட தரப்பினரால் 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் பாராளுமன்றத்தைக் கலைக்கும் முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்படிருந்தன.

அதேவேளை இந்த மனுக்களுக்கு எதிராக அரசுக்குஆதரவான தரப்பினரால் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. ஆக பாராளுமன்றம் கலைப்பு விவகாரம் உயர் பீடமான நீதித்துறையின் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மக்கள், அரசியல்தரப்பினர் என சகலரும் உயர் நீதிமன்றின் முடிவுக்காக காத்திருக்கும் நிலையில் இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா இல்லையா என்ற விவாதம் நவம்பர் 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் இடம்பெற்றிருந்தது.

பிரதம நீதியரசர் நளின் பெரேரா மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரசன்ன ஜயவர்தன, பிரியந்த ஜயவர்தன ஆகியோர் அடங்கிய மூவரமர்வு இந்த மனுவை விசாரணைக்கு எடுத்திருந்தது. 12 ஆம் திகதி திங்கட் கிழமையே இந்த வழக்கினை விசாரணை செய்வதா இல்லையா என்ற முடிவு கிடைக்குமென பரவலாக எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் அன்றைய தினம் சட்டமா அதிபரின் சமர்ப்பணத்துக்கு நேரம் போதாமை காரணமாக மறு நாள் வரையில் விசாரணைகள் நீடிக்கப்பட்டது.

திங்கட்கிழமை இவ்விடயம் குறித்து ஒரு நீதிமன்ற உத்தரவு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த சகல தரப்பினருக்கும் இந்த நீடிப்பு ஒரு ஏமாற்றமாகவே இருந்தது. திங்கட்கிழமை அன்று உயர் நீதிமன்றம் வழமைக்கு மாறான பரபரப்புடன் காணப்பட்டது. ஏனென்றால் அன்றைய தினம் வழங்கப்படவிருக்கும் நீதிமன்ற அறிவிப்பானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைய விருக்கும் அதேவேளை நாட்டில் காணப்படும் அரசியல் ஸ்தம்பித நிலையை முடிவுக்கு கொண்டுவருவதற்கும் இந்த அறிவிப்பு மிகவும் இன்றியமையாத ஒன்றாக அமைந்திருந்தது.

நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள் உயர் நீதி மன்ற வளாகத்தில் கூடியிருந்தார்கள். இவர்களுள் பெருமளவில் வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் காணப்பட்டனர். குறிப்பாக இந்திய ஊடகங்கள் காணப்பட்டிருந்தன. அதேவேளை இரு தரப்பு ஆதரவாளர்களும் நீதி மன்ற வாளாகத்திலும் வெளிப்புறத்திலும் அதிகளவில் காணப்பட்டிருந்ததுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மிகவும் கூடுதலாக அதிகரிக்கப்பட்டிருந்தது.
இதே வேளை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் உயர் நீதிமன்ற அறையில் கிட்டத்தட்ட 600 இற்கும் மேற்பட்டவர்கள் இருந்திருக்கலாம் . இவர்களில் பெருமளவானவர்கள் சட்டத்தரணிகளாகவே காணப்பட்டனர். 

அத்துடன் கட்சி ஆதரவாளர்கள் சிலர், ஊடகவியலாளர்கள், அமைச்சர்கள் எம்பிக்கள், வெளிநாட்டு தூதுவர்கள், அவதானிகள், சிவில் சமூக ஆர்வலர்கள் எனப் பலதரப்பினராலும் அந்த அறை நிரம்பியிருந்தது. அத்துடன் அங்கு போதிய ஆசனங்கள் காணப்படாதமையினால் 90 வீதமானவர்கள் நின்றவண்ணமே காணப்பட்டனர். மிகவும் நெரிசலாக அங்கு அனவரும் நிற்கவேண்டிய நிலை காணப்பட்டது. மேலிருந்து ஒரு சிறுபொருள் போடப்பட்டால் அது கீழே விழமுடியா நெருக்கம் காணப்பட்டது.

இவ்வாறான நெருக்கடிக்குள் ஒருவாறாக முதல் நாள் அமர்வு முடிவடைந்த நிலையில் அமர்வு அடுத்த நாள் செவ்வாய்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த்து. இந்த முடிவினை யாரும் எதிர்பார்த்திருக்காத நிலையில் பாரிய அதிர்ச்சியினைத் தருவதாக இது அமைந்துவிட்டது.

மறு நாள் நீதிமன்ற அமர்வுகள் ஆரம்பமானபோதும் மேலே குறிப்பிட்ட நெருக்கடியான நிலை மேலும் தீவிரமடைந்திருந்தது. ஆனால் வழமைக்கு மாறான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படிருந்தன. அதிகளவான பாதுகாப்பு தரப்பினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பொதுமக்கள் உயர் நீதிமன்றத்துக்குள் வருவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

 அத்துடன் இடவசதி போதாமை காரணமாக விசாரணைகள் இடம்பெற்ற மன்றின் உட்புறத்துக்கும் அதிகளவானவர்களை உள்வாங்கமுடியவில்லை. பெருமளவானவர்கள் வெளிப்புறங்களில் காணப்பட்டிருந்தனர். அரச மற்றும் எதிர் தரப்பு எம்பிக்கள் பிரசன்னமாகியிருந்தனர். சட்டத்தரணிகள் இவர்களுக்காக கடுமையான வாதங்களில் ஈடுபடும் நிலையில் இந்த இரு தரப்பு எம்பிக்களும் அருகருகில் இருந்தவர்களாகவும் ஒருசிலர் இருப்பதற்கு இடமற்றவர்களாக சகலபந்தாக்களையும் இழந்து நீதிமன்றில் சகலரும் சமம் என்பதனை நிரூபிக்கும் வகையில் நின்றுகொண்டும் இருந்தனர்.

இவ்வாறாக கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் விசாரணைகள் ஆரம்பமானதுடன் சட்டமா அதிபரின் சமர்ப்பணத்தை அடுத்து இடையீட்டு மனுதாரர்களின் சமர்ப்பணம் அதனை அடுத்து முறைப்பாட்டாளர்களின் தொகுப்புரை என அன்றைய அமர்வு நீண்டு சென்றது. 10 மணிக்கு ஆரம்பமான அமர்வில் 11.30 மணியளவில் 15 நிமிட ஒத்திவைப்பின் பின்னர் மீண்டும் ஆரம்பமாகியிருந்தது. அதன் பின்னர் அந்த அமர்வு 03.30 மணிவரை சென்றது. அந்த நிலையில் சகலரது சமர்ப்பணங்களும் நிறைவடைந்திருந்த நிலையில் நீதிமன்றின் அறிவிப்பு மாத்திரம் வெளியிட வேண்டிய தேவை காணப்பட்டது.

காலை 10.00 மணி முதல் மாலை 03.30 மணிவரை மிகவும் நெரிசல் மிக்க ஒரு இடமாக அந்த நீதிமன்றம் காணப்பட்டது. பின்னர் 05.00 மணிக்கு மன்று கூடுமென அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 05.50 மணிக்கே மீண்டும் மன்று கூடியது. இந்த நிலையில் நீதிமன்றம் , இந்த வழக்கினை விசாரணை செய்வதற்கு தீர்மானித்ததுடன் பாராளுமன்றை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலை டிசம்பர் 7 ஆம் திகதி வரை இடைநிறுத்தியும் உத்தரவினை பிறப்பித்திருந்தது. அத்துடன் 5 க்கும் மேற்பட்ட நீதிபதிகள் அடங்கிய முழுமையான அமர்வொன்றில் இந்த வழக்கினை விசாரணை செய்யவேண்டுமென மற்றொருமனு நீதிமன்றில் அரசஆதரவு தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சட்டத்தரணி கனக ஈஸ்வரன் தரப்பினரின் வாதமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மீறி பாராளுமன்றை கலைத்திருப்பதாகவும் 19 ஆவது திருத்தத்தின் பின்னர் இவ்வாறான ஒரு சூழ்நிலையில் பாராளுமன்றத்தினை அவரால் கலைக்க முடியாதெனவும் தெரிவிக்கப்பட்டதுடன் அரசியலமைப்பின் ஒரு சில தனி அதிகாரங்களை பயன்படுத்தி முடிவினை எடுக்க முடியாதெனவும் அரசியலமைப்பினை தொகுப்பாகவே நோக்கவேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் அரசியலமைப்பின் சில சரத்துக்களை தேவையற்ற விதத்தில் தொடர்பு படுத்த முடியாதெனவும் அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதேவேளை அரச தரப்பினரின் குறிப்பாக சட்டமா அதிபரின் வாதமாக 33/2/சி அரசியலமைப்பு சரத்தின் பிரகாரம் ஜனாதிபதி தனக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களைப் பயன்படுத்தியே பாராளுமன்றத்தை கலைத்திருக்கும் அதேவேளை இது முழுக்க முழுக்க அரசியலமைப்புக்கு உட்பட்ட விவகாரமாக அமையும் அதே வேளை இந்த விடயங்களை சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் தான் நிறைவேற்ற வேண்டிய தேவை இல்லை எனவும் கூறப்பட்டது.

தற்போது இந்த இரு தரப்பு வாதங்களின் பின்னர் இந்த வழக்கினை விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் எடுத்துக்கொண்டமையானது, ஐக்கிய தேசிய கட்சியினை பொறுத்தவரையில் சாத்தியமான ஒரு திருப்பு முனையாக அமைந்துள்ளது. ஏனென்றால் விளிம்பில் நின்ற அவர்களுக்கு இது முக்கிய புள்ளியாகக் கருதப்பட்டதுடன் நீதி தமது பக்கம் இருப்பதாக அவர்களால் கொண்டாடப்பட்ட அதேவேளை இந்த சவால்களில் அவர்களால் வெற்றிகொள்ள முடியும் என்ற உற்சாகம் அவர்கள் மத்தியில் தோன்றியது.

ஜனநாயகம் நிலை நாட்டப்பட்டிருப்பதாகவும் நீதியும் மக்களும் அவர்கள் பக்கம் இருப்பதாகவும் இந்த இடைக்கால உத்தரவினை ஐதேக தம்வசம் சாதகமாக ஆக்கியதுடன் மீண்டும் ஆட்சியை தம்பக்கம் இழுக்கும் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தியிருந்தனர்.

ஐக்கியதேசிய கட்சியினரின் தற்போதைய இந்த நிலைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் வகிபாகம் மிகவும் குறிப்பிடத்தக்களவில் இருந்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பினை பிரதி நிதித்துவப்படுத்திய கனக ஈஸ்வரனின் வாதம் இந்த இடைக்கால தீர்வினை அவர்கள் பெறுவதற்கு மிகவும் முக்கியமான பங்களிப்பாக அமைந்துள்ளது.

இந்த விடயத்தில் இன்னொரு விடயத்தினைக் குறிப்பிட்டாக வேன்டிய தேவை உள்ளது . இந்த நீதிமன்ற உத்தரவின் பின்னர் கனக ஈஸ்வரன் மன்றிலிருந்து வெளியே வந்த நிலையில் அவரது காலை வீழ்ந்து வணங்கிய இரு பெரும்பான்மையினத்தை சேர்ந்த சட்டத்தரணிகள் உங்கள் ஒருவரால் நாட்டை காப்பாற்ற முடிந்ததாக கூறியமை சுட்டிக்காட்ட வேண்டிய ஒரு சம்பவமாகக் காணப்படுகிறது.

நீதிமன்ற அறிவிப்பினை ஐக்கிய தேசிய கட்சி தமக்கு கிடைத்திருக்கும் சாதகமான புள்ளியாக்கி தமது அரசியல் காய் நகர்த்தலை ஆரம்பித்துள்ளது. தற்போது வழங்கப்பட்டிருக்கும் நீதிமன்ற உத்தரவானது இந்த வழக்கின் தீர்வல்ல என்ற உண்மையை எத்தனைபேர் அறிந்துள்ளார்கள் ?. டிசம்பர் 7 ஆம் திகதியே இந்த வழக்கின் அடுத்த நிலையை அறிய முடியும்.அதற்கிடையில் ஜனாதிபதியின் முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு வரலாறு காணாத வன்முறைகளின் களமாக அது மாறியுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியினர் வென்ற மூன்றுதடவைகள் நடந்த வாக்கெடுப்பையும் ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால, மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்துள்ளமை மற்றும் பாராளுமன்றத்தை நான்கரை ஆண்டுகளின் முன்னர் கலைத்தமை ஆகிய செயற்பாடுகள் ஆட்சியை தம்பக்கம் வைத்திருப்பதற்காக மேற்கொள்ளப்படும் ஜனநாயக விரோத செயற்பாடுகளாக வரலாற்றுத்தவறாக விமர்சிக்கப்பட்டுவரும் நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருக்கப்போகிறது.


நன்றி ஞாயிறு தினக்குரல்

சிறிசேனாவின் பரிகாரம்

ஏரம்பன்-
லங்கையின் அரசியல் களம் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மிகவும் சூடானதும் அதிர்ச்சியானதுமான நகர்வுகளைக் கடந்து சென்றுகொண்டிருக்கின்றது. இந்த அதிர்ச்சியினையும் சடுதியான மாற்றங்களையும் இலங்கையர்கள் மாத்திரமல்ல சர்வதேசம் கூட எதிர்பார்த்திருக்கவில்லை
.

கடந்த 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியினர் கூட்டணி அரசாங்கத்துடனான பிணைப்பினை முறித்துக்கொண்ட நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா எதேச்சதிகாரமாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்திருந்தார்.
இந்த நியமனம் இலங்கை அரசியலில் புதியதொரு நகர்வாகவே அமைந்துள்ளது. முன்னைய வரலாற்றினை நோக்கும் நிலையில் இவ்வாறானதொரு சர்ச்சைக்குரிய நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை.
இந்த நிலையில் இந்த பிளவு ஏற்படுவதற்கான பின்னணி குறித்து நோக்கினால், நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரில் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணி அரசாங்கம் முன்னெடுத்திருந்த செயற்பாடுகளையும் கடுமையாக விமர்சிக்கப்பட்டதனைக் காணமுடிந்துள்ளது.
நல்லாட்சி குறித்து பரவலாக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதனை சகலரும் அறிவார்கள். இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டுக்கள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட நிலையில் அமெரிக்கா தலைமையில் இலங்கையின் இணை அனுசரணையுடன் 30/1 தீர்மானம் கொண்டுவரப்பட்டிருந்தது.
முன்னதாக மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் சர்வதேச ரீதியாக மிகவும் கடுமையான கேள்விகளை எதிர்கொண்ட நிலையில் அந்த அரசை பிணை எடுப்பதற்காக வந்தாற்போல நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியதுடன், தமது கொள்கைகளை முன்வைத்திருந்தார்கள். ஆனால் ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைத்த உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் நல்லாட்சி அரசாங்கமும் தளம்பல் நிலையை எதிர்கொண்டிருந்தது.
சர்வதேசத்துக்கும் மக்களுக்கும் வழங்கிய உறுதி மொழிகளை நிறைவேற்ற நல்லாட்சி அரசாங்கம் பாரிய சவால்களை எதிர்கொண்டிருந்த அதேவேளை, அரசாங்கமும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதில் சிக்கல்கள் ஏற்பட்டிருந்தன. ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் மாற்றுத்தரப்பினரால் முன்வைக்கப்பட்ட நிலையில் அமைச்சரவை மாற்றங்கள் எனப் பல சிக்கல்களை ஐக்கிய தேசிய கட்சி எதிர்கொண்டிருந்தது.
இருந்தபோதிலும் சர்வதேசம் அக்கறை கொண்டிருக்கும் பொறுப்புக் கூறும் செயற்பாடுகள் நிலைமாற்று நீதிப்பொறிமுறைகள் உள்ளிட்ட விடயங்களில் சில செயற்பாடுகளை முன்னெடுக்க ஆரம்பித்ததன் விளைவாக காணாமல் போனோர் அலுவலகம் அமைத்தல், நல்லிணக்க செயற்பாடுகள் போன்ற சில முன்னெடுப்புக்கள் காணப்பட்டிருந்தன.
30 வருட காலமாக பாரிய விடுதலைப்போர் ஒன்றினை இலங்கை எதிர்கொண்டிருந்தது, அந்த நிலையில் இருந்து நாடு மாற்றமடைந்து வரும் நிலையில் பல எதிர்பார்ப்புகள் காணப்பட்டன. அரசாங்கம் தமிழ் மக்களுக்கான தீர்வினை எவ்வாறு முன்வைக்கப் போகின்றது, இனியாவது மக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழக்கூடிய நிலை ஏற்படுமா? இல்லையா? என்பது தொடர்பாக சகல தரப்பினரும் மிகவும் கரிசனையுடன் எதிர் பார்த்துக்காத்திருந்த நிலையில் புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் பூர்வாங்க செயற்பாடுகள், அரசியலமைப்பு சபை உருவாக்கம், அரசியலைமைப்பு வரைபு என அந்த நடவடிக்கைகள் ஒருபுறம் சென்றுகொண்டிருந்தன.
இந்த அரசியலமைப்பு செயற்பாடுகளில் இரு தரப்பினரிடையேயும் குறிப்பாக ஐ.தே.க. மற்றும் சுதந்திரக் கூட்டமைப்பு இடையில் போதிய இணக்கப்பாடுகள் எட்டப்படாத நிலையிலும் அந்த செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணமே இருந்தன. இதனால் ஏதோ ஒரு தீர்வு முன்வைக்கப்படும் என தமிழர் தரப்பு காத்திருக்கும் நிலையும் உருவாகியிருந்தது.
இவ்வாறாக நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கமாவது முழுமையாக இல்லாது விடினும் ஓரளவுக்கேனும் சில காத்திரமான நடவடிக்கைகளை முன்வைப்பார்களென்று எதிர்பார்த்திருக்கும் நிலையில் பாரிய அதிர்ச்சியை தருவதாக இந்த புதிய ஆட்சி மாற்றம் இரவோடிரவாக அரங்கேறியது.
சுதந்திரக்கட்சியினர் கூட்டணியிலிருந்து பிரிந்து செல்வதற்கான நகர்வினை மேற்கொள்வார்களென்பதை ஜனாதிபதியினதும் ஏனைய சுதந்திரக்கட்சியினரதும் நகர்வுகளின் மூலம் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிந்திருந்தாலும் மிகவும் சர்ச்சைக்குரிய முடிவாக பிரதமர் பதவி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்படும் எனச் சுற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.
ஏனெனில், இவ்விடயம் தொடர்பாக அவராலோ அல்லது அவரது ஐக்கிய தேசியக் கட்சி முகாமினராலோ அனுமானிக்கப்பட்டிருக்குமாக இருந்தால் அதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கும். அத்துடன் இந்த தருணத்தில் பிரதமர் காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார் என்பதும் இந்தத் திட்டங்கள் தொடர்பாக அவர் எதனையும் அறியாதிருந்துள்ளார் என்பதனை வெளிக்காட்டுகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனாவை நிறுத்துவதற்கானச் செயற்பாடுகள் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டதோ அதேபோல மிகவும் இரகசியமாக இந்த இராஜதந்திர நடவடிக்கைகள் காணப்பட்டிருந்தன.
அதேபோலவே கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனாவை ரணில் விக்கிரமசிங்க எவ்வாறு திடீரென அறிவித்திருந்தாரோ அதே அறிவிப்பும் அதிர்ச்சியாகவுமே இந்த நடவடிக்கையும் உள்ளது. அத்துடன் இந்தக் கருத்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினரால் பரவலாக மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறப்படும் விடயமாக உள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் ” 2015 இல் ரணில் விக்கிரமசிங்க என்ன செய்தார். அவர் எவ்வாறு மைத்திரிபால சிறிசேனாவைப் பொது வேட்பாளராக நியமித்திருந்தாரோ அதே போலவே இன்றைய நியமனமும் இடம்பெற்றுள்ளது என நாமல் ராஜபக்ஷ எம்.பி. இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார்.
ஆனால் இந்த விடயத்தில் ஒரு விடயம் மிகவும் தெளிவானதாகக் காணப்படுகிறது. ரணில் விக்கிரமசிங்க மைத்திரியைப் பொதுவேட்பாளராக அறிவித்திருந்தமை அரசியலமைப்புக்கு முரணான ஒரு விடயமென அந்த சந்தர்ப்பத்தில் எந்தவிதமான சர்ச்சையும் எழுந்திருக்கவில்லை. அத்துடன் அது ஏமாற்றுதல் என்ற வகைப்படுத்தலில் உள்வாங்கப்படுவதாக இருந்தால் ரணில், மஹிந்த ராஜபக்ஷவுக்கு செய்த ஏமாற்றாக கருத முடியாது. மைத்திரிபால சிறி சேனா மஹிந்த ராஜபக்ஷவுக்குச் செய்த ஏமாற்றாகவே அதை கருத முடியும்.
மாறாக ரணில் விக்கிரமசிங்க ஜனநாயக விரோதமாகவோ இல்லாது விடில் அரசியலமைப்புக்கு முரணாகவோ அந்த செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கவில்லை.
இன்று இலங்கையில் காணப்படும் அரசியல் குழப்ப நிலையில் அரசியல் பேதமின்றி நியாயமாக சிந்திக்கும் மக்கள் இந்த உண்மை நிலையை உணர்ந்து கொள்வார்கள் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை. யதார்த்தமாகக் கூறுவதாக இருந்தால் பாராளுமன்றப் பெரும்பான்மையை வைத்திருக்கும் தரப்பினை ஒதுக்கி பெரும்பான்மையற்ற உறுப்பினர்களுடன் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு கட்சிக்கு அரசமைப்பதற்கு ஜனாதிபதி மிகவும் சூட்சுமமான முறையில் தன்னிச்சையாக அந்தச் சந்தர்ப்பத்தை வழங்கியமை சகல இலங்கையர்களுக்கும் வெட்கத்தைத் தரும் ஒரு செயலாகவே அமைந்துள்ளதுடன், இது ஒரு அரசியல் நாகரிகமற்ற நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகின்றது.
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியால், யார் பெரும்பான்மைப் பலத்தினை பாராளுமன்றில் நிரூபிப்பார்களெனக் கருதப்படுகிறதோ அவர்களுக்கு அரசமைப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்க முடியும் என ஜனாதிபதி தரப்பு தமது நிலைப்பாட்டினை நியாயப்படுத்தும் அதேவேளை, 19 ஆவது திருத்தத்தின் பின்னர் பிரதமரை நியமிக்கும் அதிகாரம் ஒரு சில சந்தர்ப்பங்களைத் தவிர ஏனைய சந்தர்ப்பங்களில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை என பிரதமர் தரப்பு தெரிவித்துள்ளது.
அதாவது 2015 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்டிருந்த அரசியல் திருத்தத்திற்கு அமைவாக பிரதமர் இறந்தாலோ, பதவி விலகினாலோ அல்லது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டாலோ மாத்திரமே ஜனாதிபதி பிரதமரை நியமிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இந்த விடயத்தை உயர் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல முடியுமானாலும் இன்னமும் எந்தவொரு தரப்பினரும் வழக்குத் தாக்கல் செய்யவில்லை.
அத்துடன் பிரதமரை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்வதற்கு எழுத்துமூலம் அறிவிக்க முடியும் என அரசியலமைப்பின் 47 (ஏ) தெரிவிக்கின்றது. இருந்தபோதிலும் இது 19 ஆவது திருத்தம் மூலமாக நீக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அந்த சட்ட ஒழுங்குகளின் படி தற்போது நாட்டில் காணப்படும் சூழலில் அதாவது சுதந்திரக்கட்சியினர் பிரிந்து சென்றிருக்கும் நிலையில் புதிய பிரதமரை ஜனாதிபதி நியமிக்க வேண்டிய தேவை இல்லை என்றே பிரதமர் தரப்பினரதும் சட்ட வல்லுனர்களினதும் வாதமாக உள்ளது. ஆனால் இந்த சட்ட ரீதியான விளக்கம் குறித்த மயக்கங்களைத் தீர்ப்பதற்கு எவரும் நீதி மன்றங்களை அணுகியிருக்கவில்லை.
இவ்வாறு நீதிமன்றங்களை அணுகாமல் இருப்பது இரு தரப்பும் தமது நிலைப்பாட்டில் உறுதியாக இல்லையா? என்ற எண்ணப்பாட்டினைத் தோற்றுவிக்கின்றது.
பாராளுமன்றத்தில் மொத்தம் 225 உறுப்பினர்கள். பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை. ராஜபக்ஷ, சிறிசேனா கூட்டணிக்கு 104 உறுப்பினர்கள் கிடைத்துள்ளனர் (இந்த பத்தி எழுதப்படும் வரை). ரணிலின் தரப்பில் 99 பேர் உள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும் முடிவு இதில் முக்கிய பங்காற்றும் என்று தோன்றுகிறது. கட்சித்தாவல் தடைச் சட்டமும் இங்கு கிடையாது என்பதால், குதிரை பேரத்தின் மூலம் ரணில் கட்சியை உடைக்கும் முயற்சியில் ராஜபக்ஷ கட்சி ஈடுபட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. தற்போது அவரது அணி அதிக ஆசனங்களை பெறும் எனப் பரவலாக நம்பப்படுகிறது.
ஒரு வேளை அந்தத் தரப்பினரே ஆட்சியை அமைக்கலாம். ஆனால் மைத்திரியின் செயற்பாட்டையும் மஹிந்த இந்தப் பதவியை ஏற்றுக்கொண்டதையும் சர்வதேசமும் மக்களும் எவ்வாறு நோக்குகின்றனர் என்றால் ஆட்சி மாற்றம் நடந்து ஒருவாரத்துக்கும் மேலான காலம் சென்றிருக்கும் நிலையில் சீனா மற்றும் ஓமான் ஆகிய இரு நாடுகளையும் தவிர வேறெந்த நாடுகளும் இந்த அரசை அங்கீகரிக்கவில்லை என்பது வெளிப்படை உண்மையாகும். அமெரிக்கா இந்தியா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தமது வாழ்த்துக்களை இன்னமும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு தெரிவிக்கவில்லை. மாறாக ஜனநாயக பெறுமான்னங்களுக்கும் அரசியலமைப்புக்கும் மதிப்பளிக்குமாறே தெரிவிக்கின்றனர். இது சர்வதேசம் இந்த ஆட்சி மாற்றத்தினை ஏற்றுக்கொள்ளவில்லை என்றே அர்த்தப்படுகிறது. இந்த ஆட்சி மாற்றத்தினை அதிகாரத்துக்கான போட்டியாக அவர்கள் நோக்கவில்லை. ஒரு சதி மூலம் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் நடவடிக்கையாகவே அது கருதப்படுகிறது.
தற்போது நடைபெறும் குதிரை பேரங்கள் மூலமான கட்சித் தாவல்கள் மூலமாக மஹிந்த தரப்பினர் ஆட்சியமைக்கலாம். அதன் பின்னர் எதிரணியினர் தமது பலத்தினைக் காண்பித்து மீண்டும் ஆட்சி அமைக்கலாம். மகிந்த தரப்பு ஆட்சிக்கு வந்தால் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு அது தோற்கடிக்கப்படுவதற்கும் சாத்தியம் உள்ளது. இவ்வாறான குழப்பங்கள் தொடர்ந்தால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல்.
சுதந்திரக் கட்சி கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் பாராளுமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்புக்கு ஆட்சிஅதிகாரத்தை வழங்கியிருந்தால் அது மிகவும் பொருத்தமான நடவடிக்கையாக அமைந்திருக்கும் என்பதுடன் சர்வதேச உள்ளூர் வரவேற்பையும் கொள்ளும் ஒரு செயற்பாடாக அது அமைந்திருக்கும்.
சுபீட்சமும் அமைதியும் செழுமையும் நிறைந்த இலங்கையை உருவாக்க சர்வதேசம் அழுத்தங்களையும் கட்டமைப்பு அபிவிருத்திக்கான ஆதரவினையும் வழங்கி வரும் நிலையில் அதுவே சகல இலங்கையர்களினதும் அபிலாஷையாகக் காணப்படும் சூழ்நிலையில், மைத்திரிபால சிறிசேனா, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இணைந்து நடத்தியிருக்கும் முறையற்ற இந்த ஆட்சிமாற்ற அரங்கேற்றம் இலங்கையின் எதிர்கால அரசியல் செயற்பாடுகளுக்கு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிட்டது.
அத்துடன் அரசியல் நெருக்கடிகளைத் தொடர்ச்சியாக எதிர்கொண்டுவரும் மாலைதீவு போன்ற பிராந்திய நாடுகளைப் போன்ற நிலை இங்கும் ஏற்படுவதற்கு சாத்தியங்கள் உள்ளது.
இந்த ஆட்சி மாற்றம் இரு விடயங்களை மாத்திரம் மிகவும் ஆணித்தரமாக வெளிப்படுத்தி நிற்கின்றது. அதாவது மைத்திரிபாலவும் மஹிந்தவும் சர்வதேச நன்மதிப்பினை மட்டுமல்லாது உள்நாட்டிலும் அதனை இழந்திருக்கின்றார்கள். அத்துடன் 2015 இல் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எவ்வாறான ஒரு ஏமாற்றத்தை மைத்திரிபால சிறிசேன கொடுத்தாரோ அதற்கான பரிகாரத்தை இதன் மூலம் நிறைவேற்றியிருக்கிறார்.
நன்றி தினக்குரல்

நல்லிணக்கத்துக்கான சூழல் அமைவதற்கு மனிதாபிமான பணிகள் மூலமான அபிவிருத்திகள் ஆதரவாக அமையும்

சர்வதேச செஞ்சிலுவை சங்கங்கள் மற்றும் செம்பிறைச் சங்கங்களின் செயலாளர் நாயகம் எல்ஹாட்ஜ் அஸ் சி 






யோ. நிமல்ராஜ்

நல்லிணக்கத்துக்கான சூழல் அமைவதற்கு மனிதாபிமான பணிகள் மூலமான அபிவிருத்திகள் ஆதரவாக அமையும். அதேவேளை மக்கள் மத்தியில் நல்லிணக்கச் செயற்பாடுகள் மூலம் சமாதானம் ஸ்திரத்தன்மை என்பவை கட்டியெழுப்பப்படவேண்டுமென கூறியுள்ள சர்வதேச செஞ்சிலுவை சங்கங்கள் மற்றும் செம்பிறைச் சங்கங்களின் செயலாளர் நாயகம் எல்ஹாட்ஜ் அஸ் சி இலங்கையில் இடம்பெற்றுள்ள அபிவிருத்திகள் தொடர்பாக தெளிவான நோக்கு இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையர்களின் கண்களினூடாக பார்க்கும் போது அபிவிருத்தி திட்டங்கள் மாற்றங்கள் சிறந்ததாக அமைந்திருக்கலாம் ஆனால் புதிய விருந்தினர் ஒருவர் இவை தொடர்பான தெளிவான நோக்கினை கொண்டிருக்க முடியாதெனவும் குறிப்பிட்ட அவர், பாதிக்கப்பட்ட மக்கள் தமது வாழ்வாதாரங்களையும் வாழ்விடங்களையும் மீளக்கட்டியெழுப்புவதில் இன்னமும் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

தினக்குரலுக்கு வழங்கிய விசேட நேர்காணல் ஒன்றில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த எல்ஹாட்ஜ் அஸ் சி இவ்வாறு குறிப்பிட்டார்.

அவரது நேர்காணல் கேள்வி பதில் வடிவில்;

கேள்வி: போருக்கு பின்னர் இலங்கையில் இடம்பெறும் உட்கட்டமைப்பு அபிவிருத்திகள், ஏனைய மாற்றங்களை அரச சார்பற்ற நிறுவனம் என்ற ரீதியில் எவ்வாறு நோக்குகின்றீர்கள்?

பதில்: இலங்கையர்களின் கண்களூடாக பார்க்கும்போது தம்மளவில் அபிவிருத்தி திட்டங்கள் ஏனைய மாற்றங்கள் நன்றாகவே இருக்கலாம். சகல காலப்பகுதிகளிலும் இவ்வாறான நிலையையே அவர்கள் கொண்டிருந்திருப்பார்கள்.

ஆனால் இலங்கையில் ஒரு புதிய விருந்தினர் அபிவிருத்தி நடைபெறும் பகுதிகளூடாக செல்லும் நிலையில் அபிவிருத்தி தொடர்பான பரந்த நோக்கினை கொண்டிருக்க முடியாது. என்பதே எனது நிலைப்பாடாகும்.

எம்முடன் இணைந்து பணியாற்றியவர்கள், எனது இலங்கை விஜயத்தில் நான் சந்தித்த மக்கள் ஆகியவர்களுடனான சந்திப்பின் அடிப்படையில் அவர்கள் இன்னமும் சிறந்த எதிர்காலம் தொடர்பான நம்பிக்கைகளையும் வாய்ப்புக்களையும் எதிர்நோக்கிய வண்ணம் உள்ளனர் என்றே கூறமுடியும்.

அதேவேளை பாதிக்கப்பட்ட மக்கள் தமது வாழ்வாதாரத்தையும் வசிப்பிடங்களையும் மீள உருவாக்குவதில் இன்னமும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்பவர்களாகவே உள்ளனர்.

நாட்டில் தற்பொழுது காணப்படும் நிலைமைகள் தொடர்பாக நாம் கவனத்தில் கொண்டுள்ளதுடன் குறித்த சில விடயங்கள் தொடர்பாக பல்வேறு திட்டங்களூடாக இணைந்து செயற்படுவதற்கும் திட்டமிட்டுள்ளோம்.

குறிப்பாக மக்களின் வாழ்வாதாரம், வசிப்பிடம் ஆகியவற்றை கட்டி எழுப்புவது தொடர்பில் அவர்களுக்கு தேவையான உதவித் திட்டங்களை முன்னெடுத்து இணைந்து செயற்பட நாம் தயாராகவே உள்ளோம். இந்த விடயங்கள் தொடர்பான புதிய திட்டங்கள் செயற்படுத்தப்படும்.

கேள்வி: இலங்கை விஜயத்தின் ஓர் அங்கமாக நீங்கள் வடபகுதிக்கான விஜயமொன்றையும் மேற்கொண்டுள்ளீர்கள். வடபகுதி மக்களுக்கான வீட்டுத்திட்டம் ஒன்றையும் ஆரம்பித்து வைத்துள்ளீர்கள். ஆனால் நாட்டில் நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பாக சர்வதேச அரசசார்பற்ற நிறுவனம் என்ற ரீதியில் தங்களின் நோக்கு எவ்வாறு உள்ளது?

பதில்: நல்லிணக்கச் செயற்பாடுகள் என்பவை பூரணமான அரசியல் சார் பரிமாணங்களை கொண்ட விடயமாகும். செஞ்சிலுவை சங்கங்கள் எந்தவிதமான பக்கச்சார்பும் பாராபட்சமும் இன்றி உலகளவில் செயற்பட்டு வருகின்ற ஓர் அமைப்பாகும். இவ்வறான நிலையில்  அதன் நிகழ்ச்சி நிரல் தொடர்பாக அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

எமது நிகழ்ச்சித திட்டமானது முழுக்க முழுக்க மனிதாபிமான நிகழ்ச்சித் திட்டத்தினை கொண்டதாகும். நாம் அதனையே மேற்கொண்டு வருகின்றோம்.
அத்துடன் இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் மக்களையும் இணைத்து செயற்படுகின்றோம். மக்கள் தமது தேவைகளை நிறைவேற்றுவதற்காக மட்டும் இவ்வாறு ஒன்றிணைத்து செயற்படவில்லை.

இந்த தேவைகள் அவர்களின் விருப்பங்களை நிறைவுசெய்வதற்காக மட்டுமோ அல்லது அவர்களுக்கு தேவையான பொருட்களைப் பெற்றுக்கொள்வதாக மட்டுமோ அமைந்துவிடவில்லை.

அதேநேரம் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு மக்கள் தாமாகவே தீர்வுகாணவேண்டும். நல்லிணக்கச் செயற்பாடுகளூடாக மக்களின் தேவைகள் பாரபட்சமின்றி தீர்த்து வைக்கப்பட வேண்டும்.

எந்தவிதமான பக்கச்சார்பின்மையும் பாரபட்சமுமின்றி மனிதநேய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

கேள்வி: இலங்கையின் நல்லிணக்கச் செயற்பாடுகளில் சர்வதேச செஞ்சிலுவை சங்கங்களின் செயற்பாடுகள் எவ்வாறு அமைந்துள்ளன? நல்லிணக்க செயற்பாடுகள் அரசியல் சார்ந்ததாக இருக்கும் நிலையில் தன்னார்வ தொண்டு நிறுவனமாக உள்ள தங்களின் அமைப்பு நல்லிணக்கச் செற்பாடுகளுக்கு எவ்வாறு உதவமுடியும்?

பதில்: நான் கூறியதுபோல, எமது நிகழ்ச்சிநிரலானது நல்லிணக்க செயற்பாடுகளுக்கு பங்களிப்பு செய்வதென்ற இலக்குடனேயே காணப்படுகின்றது.
ஏனென்றால் தாம் அனைவரும் சமாதானம் மற்றும் ஸ்திரத்தன்மை உருவாக வேண்டுமென விரும்புகிறோம்.

நான் கூறியதுபோல மனிதாபிமான பணிகளும் நல்லிணக்கத்திற்கு முக்கிய ஆதாரங்களாகும். ஏனென்றால் நாம் அனைவரும் சமாதானம் மற்றும் ஸ்திரத்தன்மையினையே விரும்புகின்றோம்.
அரசியல் நடவடிக்கைகளில் நாம் அனைவரும் ஈடுபட்டிருக்கவில்லை.

ஆனால் அனைவரும் மகிழ்ச்சி சமாதானம், அமைதியினையைே விரும்புகின்றோம். நல்லிணக்க செயற்பாடுகள் அரசியல் சார்ந்தவையாக உள்ளன. ஆயினும் அது மனிதாபிமானப் பணிகளை நாம் முன்னெடுப்பதன் மூலம் நல்லிணக்கத்திற்கு ஆதரவாக செயற்பட முடியும்.

மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான நம்பிக்கையினை எம்மால் வழங்கமுடியும். நல்லிணக்கம் உருவாவதற்கான சிறந்த சூழ்நிலைகளையும் நம்பிக்கையையும் எம்மால் வழங்க முடியும். இதன்மூலம் அதற்குரிய பெறுமானங்கள் மேலும் வலுவடையும்.

கேள்வி: கடந்த காலங்களில் அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கையில் தமது பணிகளை தொடர பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருந்தன. குறிப்பாக யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் சவால்கள் எதிர்கொள்ளப்பட்டிருந்தன. இவ்வாறான நிலையில் அரசாங்க தொண்டு நிறுவனங்களுக்கு எவ்வாறு ஆதரவளிக்க முடியும்?

பதில்: செஞ்சிலுவைச் சங்கம் அல்லது செம்பிறைச் சங்கம் ஆகியவை ஏனைய அரச சார்பற்ற நிறுவனங்களிலிருந்து வேறுபட்டவையாகும். எமது நிறுவனம் இன்று நேற்று தோன்றியதல்ல. பல ஆண்டுகள் பழமையாதனது அத்துடன் அனர்த்தங்கள், மோதல்கள் இடம்பெற்ற சகல பகுதிகளிலும் எமது உதவிப்பணிகள் தொடர்ந்துள்ளன.

மக்களையும் எம்முடன் இணைந்து இவ்வறான பணிகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம். பொது அதிகார சபைகளின் உதவியுடன் எம்மால் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மனிதாபிமான உதவிப்பணிகள் தொடர்பாக உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் ஆதரவு சிறப்பாகவே காணப்படுகின்றது.

இலங்கையில் கடற்கோள் இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்ட சகல சந்தர்ப்பங்களிலும் நாம் செயற்பட்டுள்ளோம். மாறாக வந்து சென்று கொண்டிருக்கவில்லை. இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் இலங்கைக்குச் சொந்தமானது. எந்தச் சந்தர்ப்பத்திலும் வெளியேற முடியாது. தொடர்ந்தும் எமது பணிகள் இங்கு தொடரும் இந்த நிலைமை தக்ககாலத்தில் கொள்ளப்படும். அதற்காக சில கொள்கைகளில் இணக்கம் கட்டுப்பாடுகள் காணப்பட வேண்டும். அத்துடன் செஞ்சிலுவை சங்கங்கள் மிகவும் தெளிவான நிலையில் உள்ளன. மனிதாபிமான உதவிப் பணிகளை தொடர்வதே எமது தாய் கொள்கையாகும். அதில் கவனம் செலுத்துவோம்.

இதற்கு பாரபட்சமற்ற பக்கச்சார்பில்லாத செயற்பாடுகள் அவசியமானதாகும். அதேவேளை எமது அமைப்பு சுயாதீனத்துடன் செயற்பட்டு வருகின்றது.

ஒரு சந்தர்ப்பத்தில் குறைவான தரத்திலும் இன்னொரு சந்தர்ப்பத்தில் உயர்தரத்திலும் சேவைகளை வழங்கமுடியாது. சிறந்த சேவை காரணமாகவே நீடிக்க முடியும். இலங்கையில் பல்வேறு அனர்த்தங்கள் ஏற்பட்டிருந்தன. இதன்போதும் மக்களை இணைக்க எமது பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

இங்கு இடம்பெற்ற மோதல்களின் போதான இழப்புக்கள் தொடர்பாக மக்கள் எம்மிடம் கூறியுள்ளனர். அன்றைய காலப்பகுதிமுதல் பல நிறுவனங்கள் அரசசார்பற்ற நிறுவனங்கள் தமது பணிகளை மேற்கொண்டிருந்தனர்.

ஆனால், கடற்கோள் ஏற்பட்ட காலப்பகுதி முன்னரான காலப்பகுதிமுதல் எமது செயற்பாடுகள் இங்கு காணப்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில் செஞ்சிலுவைச் சங்கம் மட்டுமே தமது பணியை மேற்கொண்டிருந்தது.

மக்கள் சுனாமியால் உயிரிழப்பு, பொருட்சேதம், மனநோய் போன்றவற்றை சந்தித்திருக்கிந்தனர். எமது பணிகள் மூலம் மக்களின் சிறந்த எதிர்காலம் கட்டி எழுப்பப்பட்டது.

சகல சந்தர்ப்பங்களிலும் மனிதாபிமான பணிகளை முன்னெடுப்பதே எமது இலக்காக இருந்தது.

கேள்வி: மோதல்கள் நிறைவடைந்திருக்கும் நிலையும் வடக்கில் இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயங்களில் பொதுமக்களின் காணிகள் இன்னமும் விடுவிக்கப்படாத நிலையில் உள்ளன. இதற்காக மக்கள் போராட்டங்களை நடத்தியும் அரசாங்கம் அந்த காணிகளை விடுக்கவில்லை. இது குறித்து தங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்: மக்கள் தமது உரிமைகளுக்காக, குடியுரிமைக்காக போராடுகின்றனர். இவ்விவகாரம் தொடர்பாக அரசாங்கம், அது மக்களின் பிரச்சினை எனக்கூறுகின்றது.

அதேவேளை இந்த விவகாரமானது செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதான பணி எல்லைக்கு உட்பட்ட விடயமல்ல. மக்களுக்கு எவ்வாறு உதவ முடியும் அவர்களின் வாழ்வாதாரத்தை எவ்வாறு கட்டியெழுப்ப முடியும் என்பதே எமது இலக்காக உள்ளது. மக்களின் மீள்குடியேறறம் மிகவும் அசியமானது. நாம் அதற்காக எமது உதவிப்பணிகளை முன்னெடத்து வருகின்றோம். அதேவேளை வாழ்வாதாரத்தை கட்டி எழுப்புவதும் எமது பிரதான இலக்காகும். அந்த அடிப்படையில் எம்மால் உதவிகளை வழங்கமுடியும்.

உலகின் சகல பகுதிகளிலும் மக்கள் தமது உரிமைகளுக்காக போராடியே வருகின்றனர்.

கேள்வி: இலங்கை ஜனாதிபதியை சந்திக்கவுள்ளீர்கள். இச்சந்திப்பின் போது, உயர்பாதுகாப்பு வலயங்களில் விடுவிக்கப்படாத மக்களின் காணிகள் தொடர்பராக உங்களால் கூறமுடியுமா?

பதில்: முதலில் அவரை சந்திப்போம்.

கேள்வி: எதிர்காலத்தில் இலங்கையில் எவ்வாறான உதவிப் பணிகளை முன்னெடுக்கவுள்ளீர்கள்?

பதில்: நாம் அங்கு சகல கஸ்டப் பகுதிகளிலும் உதவிகளை வழங்கிவருகிறோம். மக்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டி எழுப்புவதே எமது நோக்கம். சில சந்தர்ப்பங்களில் அவர்கள் தாமாகவே பிரச்சினைகளை எதிர்கொள்ளநேரிடும்.

மனிதாபிமானத்தை பாதுகாக்கும் அதேவேளை வேறு
விடயங்களிலும் நாம் கவனம் செலுத்தி வருகிறோம்.

மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து வழங்கி வருவதுடன் விதிவிபத்துக்கள், கடலில் இழுத்துச் செல்லப்படுதல் போன்ற சம்பவங்களில் உயிரிழப்புக்கள் தவிர்க்கப்படுவதனையும் நாம் எமது விழிப்புணர்வுத் திட்டங்கள் மூலம் தடுத்து வரும் அதேவேளை மீட்பு பணிகளும் தொடர்கின்றன.

இவ்வறாக தேவைப்படும் சகல சந்தர்ப்பங்களிலும் எமது பணிகள் தொடரும்.

கேள்வி: உலகளவில் பல்வேறு நாடுகளில் தங்கள் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. எந்த நாடுகளில் கடுமையான சவால்கள் எதிர்கொள்ளப்படுகின்றது?

பதில்: மத்தியகிழக்கு நாடுகளில் உதவிப் பணிகளை மேற்கொள்வதில் பாரி சவால்களை எதிர்கொள்கின்றோம். குறிப்பாக சிரியாவில் மிகமோசமான நிலை காணப்படுகின்றது.

அங்கு இதுவரை 6 மில்லியன் பேர் உள்ளக இடம்பெர்வுகளை எதி்கொண்டுள்ளனர். 4 மில்லியன் பேர் வேறுநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

சில முற்றுகையிடப்பட்ட பகுதிகளில் உதவிப்பணிகளை முன்னெடுக்க முடியாத நிலையே காணப்படுகின்றது. அந்த இடங்களில் விமானம் மூலம் உதவிப் பொருள் விநியோகம் மேற்கொள்ளப்படுகிறது. இது சரிரயான வழிமுறை அல்ல.

சிரியாவில் மிகமோசனமா அவலநிலை தொடர்கின்றது. இங்கு மிகவும் கொடூரமான  நிலையையே காணமுடியும்.

அதேவேளை மத்திய ஆபிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலும் மிகமோசமான நிலை காணப்படுகின்றது.

கேள்வி: இலங்கையில் உதவிப்பணிகளை மேற்கொள்ள அரசாங்கம் தடையாக உள்ளதா? அரசின் ஆதரவு எவ்வாறு உள்ளது?

பதில்: இல்லை, இங்கு எமது உதவிப்பணிகளை முன்னெடுப்பதற்கு போதுமான முன்னெடுப்பதற்கு போதுமான இடமளிக்கப்பட்டுள்ளது. இலங்கை செஞ்சிலுவைச்சங்கம் ஆகிய முறையில் இங்கு செயற்பட்டு வருகின்றது.

எமது தேசிய சமூகத்துக்கு நம்பகத்தன்மையுடன் நாம் செயற்பட்டு வருகின்றோம். மக்களுக்கான உதவிகளை வழங்கதயாரகவே உள்ளோம். சிறந்த எதிர்காலத்தை அவர்களுக்கு அமைத்துக்கொடுப்பதே எமது நோக்கமாகும்.

இங்கு எமது பணிகளுக்கு அரசாங்கம் தடையாக இல்லை. நாம் எமது சேவைகளை வழமை போலவே தொட்ந்து வருகின்றோம். எம்மால் எவ்வாறான சேவைகள் தொடர்கின்றன. போருக்கு பின்னர் மக்களுக்கு தேவையான வீடுகளை நிர்மானித்து வழங்கியுள்ளோம். எமது செயற்பாடுகள் தொடர்பாக அரசாங்கம் திருப்தியுடன் உள்ளது.

கேள்வி: அரசார்பற்ற நிறுவனங்கள் போரினால் பாதிக்கப்பட மக்களை இலக்காக கொண்டு செயற்படுவதாக கூறப்படுகின்றது. இவ்வறான நிலையில் மலையகம் உள்ளிட்ட ஏனைய பகுதி மக்களையும் உள்ளடக்கிய புதிய உதவித் திட்டங்கள் தங்களால் முன்னனெடுக்கப்படுமா?

பதில்: முன்னர் கூறியதுபோல மக்களின் தேவைகளையே நாம் நிவர்த்தி செய்கின்றோம். போர் நடைபெற்ற காலப்பகுதியில் மக்களுக்கு உதவ வேண்டிய தேவை இருந்தது. அதேவேளை அனர்த்தங்கள் இடம்பெற்றபோதும் நாம் உதவிப் பணிகளை முன்னெடுத்தோம். எமது வளத்துக்கு உட்பட வகையில் சகல மக்களுக்குமான உதவிகள் தொடரும்.



ஈரானின் அணு ஆயுத கனவு பலிக்குமா



அமெரிக்காவின் தந்திரோபாய சுற்றுக்குள் ஈரானை உள்வாங்குவதற்கான ஒரு முயற்சியாக ஈரானின் அணு உடன்படிக்கையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதன் பிரதிபலனாக ஈரான் அமெரிக்காவின் பிடிக்குள் வீழ்ந்துவிட்டால் அமெரிக்காவின் முக்கிய விரோதிகளான ரஷ்யா மற்றும் சீனாவை எதிர்கொள்வதில் அமெரிக்காவின் கரங்கள்

கிரேக்கம் அடுத்தது என்ன‌


உலகளவிலுள்ள ஐரோப்பாவைச் சாராத நாடுகள் தமது பொருளாதார அபிவிருத்தியினை இலக்குவைத்த பயணங்களுக்கு ஐரோப்பியத்திற்குள் எப்படியாவது புகுந்து விடவேண்டுமென்ற இலக்குடனேயே உள்ளன.

ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் கிரேக்கம் அந்த அமையத்திலிருந்து வெளியேற்றப்படும் நிலையினை எதிர்கொண்டுள்ளது.

2009 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில்

போர்க்குற்றவாளிகள் தப்பிக்கலாமா?

‘‘சூடானின் பார்பூர் பிராந்தியத்தில் இடம்பெற்ற மோதல்களின் 3 இலட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளார்களாயின் பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, யேமன், உக்ரைன் உள்ளிட்ட நாடுகள் சிலவற்றில் இடம்பெற்ற மோதல்களின் போது எத்தனை இலட்சம் பேர் கொல்லப்பட்டார்கள்? சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பஷீருக்கு எதிரான சர்வதேச பிடியாணைகள் ஒன்றல்ல இரண்டு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர் தென்னாபிரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் அவரை கைது செய்யவேண்டுமென சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐ.சி.சி.) உத்தரவு விடுத்த பின்னர் இணையத்தளமொன்றில் எழுந்த கேள்வியே இது.

இந்த கருத்தினை பதிவு செய்திருந்த வலைத்தள பயனர் சூடான் ஜனாதிபதிக்கு ஆதரவானவரன்றோ அல்லது ஐ.சி.சி.க்கு

பூகோள எதிர்பார்ப்புகளை பொய்யாக்கிய ஜி 7 மாநாடு

பிராந்திய மற்றும்  பூகோள அளவில் எதிர்கொள்ளப்படும் முக்கிய பிரச்சினைகள்  மற்றும் மத்திய கிழக்கு மோதல் விவகாரங்கள் தொடர்பான  ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கான பிரகடனங்கள் இம்மாநாட்டின் இறுதியில் வெளியாகலாம் என்ற சர்வதேச ரீதியிலான எதிர்பார்ப்புக்கள் பொய்ப்பிக்கப்பட்ட நிலையில், ஜி 7 மாநாடு  நிறைவடைந்துள்ளதென  கூறிக்கொள்ளலாம்.

உலகின் செல்வந்த நாடுகளின் தலைவர்கள் வருடத்திற்கு ஒருதடவை ஒன்று சேர்வது வெறுமனே விருந்துபசாரங்களுக்காகவும் குழு புகைப்படங்களுக்காகவும்தான் என்ற நிலைப்பாடு மக்கள் மத்தியில் தோன்றுமளவிற்கு அத்தலைவர்களின்  செயற்பாடுகள் அமைந்துவிட்டன.

மலையடிவாரத்தினைப் பின்னணியாகக் கொண்டு  அதனை நோக்கியவாறு அமெரிக்க ஜனாதிபதி  ஒபாமா மரத்திலான  வாங்கிலில் இரு கைகளையும்  அகல நீட்டி விரித்தவாறு அமர்ந்திருக்க,

ஆசியாவின் குடியேற்ற நெருக்கடி

ஆசிய நாடுகள் மத்தியில் இன்றைய காலப்பகுதியில் மிகவும் நெருக்கடி நிறைந்த பிரச்சினையாக உருமாறியுள்ளது குடியேற்றவாசிகள் விவகாரம்.
இப்பிரச்சினையில் தொடர்புபட்டிருக்கும் குடியேற்றவாசிகள் எனக் கூறப்படுபவர்கள் மியன்மாரின் ரொஹிங்யா இனத்தவர்களும் பங்களாதேஷியர்களும் ஆவர். இவ்வாறான நிலையில் இம்மக்களை குடியேற்றவாசிகள் என்று கூறுவதை விட படகு அகதிகள் என்றழைப்பதுதான் சந்தர் பத்திற்குப் பொருத்தமானதாக அமையும்.

மேலைத்தேய நாடுகளை நோக்கி பொருளாதார இலக்குகளை வெற்றிகொள்வதற்காக ஆசிய மக்கள் சென்ற நிலை இன்று மாற்றமடைந்துள்ளது. ஆசிய நாடுகளைச் சேர்ந்த மக்களே மற்றொரு ஆசிய நாட்டினை நோக்கிச் செல்வதனை குடியேற்றம்

யாழ்.மொழி வழக்கிற்கு வானொலி நாடகங்களை மாற்றி அமைத்த கே.எஸ்.பாலா - பி.எச்.அப்துல் ஹமீத்

இந்திய கலாசார  நிலையத்தின் ஏற்பாட்டில்  இடம்பெற்ற 
நினைவு நிகழ்வில்  பி.எச்.அப்துல் ஹமீத் ஆற்றிய உரை 






அரங்கில்  இருக்கைகளின்றி  வெறிச்சோடிக்காணப்பட்ட  சபையில்  அதி பார்வையாளர்களை   கொண்ட நிகழ்வொன்று  வழமைக்கு மாறான முறையில்  கொழும்புச் தமிழ்ச் சங்கத்தில்  நடைபெற்றது.
வழமையில் கொழும்பு  தமிழ்ச்சங்கத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் பலவற்றுக்கு  அதன் சங்கரப்பிள்ள மண்டபம் முழுவதுமாக  பார்வையாளர்களால்

“தனி நடிப்பினை மக்கள் மத்தியில் கொண்டு சென்ற பல்திறன் கலைஞர்”


 தனி நடிப்பினை மக்கள் மத்தியில் கொண்டு சென்ற பல்திறன் மிக்க கலைஞரே கே.எஸ். பாலச்சந்திரன் என தென்றல் சேவையின் பணிப்பாளர் ஆர்.யோகராஜன் தெரிவித்தார்.




 தமிழ்ச் சங்கத்தில் இந்திய கலாசார நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கே.எஸ். பாலச்சந்திரன்  நினைவு நிகழ்வில் உரையாற்றும் போதே ஆர். யோகராஜன் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் ;
அண்ணை றைட் கே.எஸ்.பாலச்சந்திரன் என எல்லோராலும் அழைக்கப்பட்ட கே.எஸ்.பாலச்சந்திரன் 1944ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10ஆம் திகதி யாழ்ப்பாணம் கரவெட்டி என்ற கிராமத்தில் பிறந்தார்.
இலங்கையில் பல்துறைக் கலைஞர்கள் என்று ஒரு சிலர்தான் இருக்கின்றார்கள். நகைச்சுவை, தனிநடிப்பு,

இறுதி நிமிடத்தில் விமானியை தொலைபேசியில் தொடர்புகொண்ட அந்தப்பெண் யார்?




உண்ணாமல், உறங்காமல், நோயாளர்களாக, மனநோயாளர்களாக வாடிய தேகங்களுடன் காத்திருந்த உறவுகளுக்கு மலேசிய அரசாங்கம் விடுத்துள்ள செய்தி பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.


இந்த அறிவிப்பும்  Mஏ 370 யின் முடிவும் ஏற்கனவே அனுமானிக்கப்பட்ட ஒரு துர் முடிவுதான். ஆனால், அது குறித்த இறுதி அறிவிப்பு விடுக்கப்படும் வரையில் கூட தமது உறவுகள் எங்கோ ஒரு மூலையில் உயிர்வாழ மாட்டார்களா என்ற ஏக்கம் உறவினர்கள் உள்ளிட்ட உலகத்தவர்களின் மனதில் பதிந்திருந்தது.

“ஆழ்ந்த கவலை மற்றும் மனவருத்தத்துடன் இந்தச் செய்தியை நான் உங்களிடம் கூறுகின்றேன். செய்மதி மூலமான புதிய தரவுகளை அடிப்படையாகக் கொண்ட ஆராய்வின் பெறுபேறாக Mஏ 370 விமானம் இந்து சமுத்திரத்தின் தென் பிராந்திய கடலில் வீழ்ந்துள்ளது. இதனால் அவ்விமானத்தில் பயணித்த அனைவரும் இறந்துவிட்டார்களென்பதை வருத்தத்துடன் கூறிக்கொள்கின்றேன்’ மார்ச் எட்டாம் திகதி நள்ளிரவு 12.41 மணிக்கு புறப்பட்ட Mஏ 370 விமானம் காணாமல் போய் 16 நாட்களும் சில மணித்தியாலங்களும் கடந்திருந்த நிலையில் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கினால் கடந்த திங்கட்கிழமை பின்னிரவு ஊடகவியலாளர் மாநாட்டில் கூறப்பட்ட செய்தி அது.

இச்செய்தியாளர் மாநாடு இடம்பெறுவதற்கு முன்னர் இந்த அறிவிப்பு பயணிகளின் உறவினர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நற்செய்தி கிடைக்குமா என்று காத்திருந்தவர்களின் இதயங்களை நொருக்கிய அந்தச் செய்தி Mஏ 370 காணாமல்போன தகவலைக் காட்டிலும் பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

கோலாலம்பூரிலிருந்து கடந்த எட்டாம் திகதி நள்ளிரவு 12.41 மணியளவில் 227 பயணிகள், 12 சிப்பந்திகளுடன் விமானம் சீனாவை நோக்கிப் புறப்பட்ட நிலையில் 01.21 மணியிலிருந்து அதன் சகல தொடர்புகளும் துண்டிக்கப்பட்டிருந்தன.

அதன் தொடர்ச்சியாக விமானம் காணாமல் போய்விட்டதாக அறிவிக்கப்பட்டு பின்னர் அது தொடர்பான தரவுகள் பரிமாறப்பட்டது. வியட்நாம், மலேசியா இணைந்து ஆரம்ப தேடல் பணிகளை மேற்கொண்டிருந்தன.

இந்நிலையில் விமானம் திசை திருப்பப்பட்டதாகக் கூறப்பட்டது. மலாக்கா நீரிணை நோக்கி விமானத்தை திசை திருப்பியிருக்கலாமென்று கூறப்பட்டது.

இதனை அடுத்து பல நாடுகள் இணைந்து இந்து சமுத்திரம், மலாக்கா நீரிணை போன்ற பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தியிருந்தும் எதுவிதமான ஆக்கபூர்வமான பதில்கள் கிடைக்கப்பெறவில்லை.

இந்நிலையில் மார்ச் 20ஆம் திகதியன்று அவுஸ்திரேலியக் கடற்பரப்பில் பேர்த்திலிருந்து தென் மேற்காக 1350 மைல் தொலைவில் இரு சிதைவுகள் உள்ளதாக அவுஸ்திரேலியப் பிரதமர் டொனி அபொட் தனது பாராளுமன்ற அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தார்.

அவ்விடயம் தொடர்பான அவரது அறிவிப்பினை தொடர்ந்து விமானத்தின் தேடுதல் முயற்சிகள் புதிய திருப்பத்தினை கண்டிருந்தன. அதன் விளைவாக அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் அதி தொழில்நுட்பத் திறன் நிறைந்த விமானங்கள், கப்பல்களை தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தியிருந்தன.

இந்நிலையில் தமது செய்மதிகளும் விமானத்தின் சிதைவுகள் குறித்த பிரதிமைகள் பதியப்பட்டுள்ளதாக சீனாவும் பிரான்ஸும் கூறியிருந்தன.

இந்நிலையில் அச்சிதைவுகள் விமானத்தின் பாகங்களாக இல்லாமல் இருக்கலாமென அவுஸ்திரேலியா கூறியிருந்தது. ஆனாலும், தேடுதல் நடவடிக்கைகள் தொடர்கின்றன.

இவ்வாறாக பல நாடுகளின் முயற்சியில் இந்த விமானத்தை தேடும் பணிகள் பல்வேறு அதி நவீன தொழில்நுட்பத்துடன் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், மார்ச் 23ஆம் திகதி பின்னிரவு மலேசிய பிரதமரின் திடீர் அறிவிப்பினால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். விமானம் தென் இந்து சமுத்திரக் கடலில் மூழ்கிவிட்டது என்பதே அந்த அறிவிப்பாகும்.

இதுவே, இவ்விமானத்தின் மாயத்தின் பின்னரான முன் கதைச் சுருக்கம். அதன் விரிவான பார்வை கடந்த இருவாரப் பத்திரிகைகளில் வெளிவந்த பத்திகளில் அலசப்பட்டிருந்தது. அதன் முழு வடிவத்தினை தினக்குரலின் குறித்த திகதிகளினான இபேப்பரிலும், தீதீதீ.ஞுணூச்ட்ணீத.ஞடூணிஞ்ண்ணீணிt.ஞிணிட் என்ற முகவரியிலும் பார்வையிட முடியும்.

விமானம் இந்துசமுத்திரத்தில் மூழ்கியதில் அனைவரும் இறந்துவிட்டனர் என்ற அறிவிப்பினை விடுப்பதற்கான ஆதரமாக மலேசியப் பிரதமர் எடுத்துக்கொண்ட தரவுகள் லண்டனின் பிரபல ஆய்வு நிறுவனம் ஒன்றின் முடிவுகளேயாகும்.

Mஏ 370 ஐ கண்டறிவதற்காக 19ஆம் நூற்றாண்டின் கணிதவியல் மாதிரியை பயன்படுத்தி அதன் அடிப்படையிலேயே விமானம் தொடர்பான முடிவு மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

விமானத்தின் சகல தொடர்புகளும் (ட்ரான்ஸ் பொன்டர், ராடர்) துண்டிக்கப்பட்ட நிலையில் அதன் நகர்வினை கறுப்பு பெட்டி, மூலமான சமிக்ஞைகளை  (கடிணஞ்ண்) அடிப்படையாகக் கொண்டு கணிப்பதே அந்த கணிதவியல் மாதிரியான டொப்ளர் முறைமையாகும்.

ஒரு மணித்தியாலத்திற்கு ஒருமுறை வெளியாகும் இந்த சமிக்ஞையினை அடிப்படையாகக் கொண்டு அதன் நகர்வை கணிப்பது மிகவும் சிரமமான விடயமென பிரிட்டனின் இன்மார்ஸ்ட் செய்மதி நிறுவன உபதலைவர், கிறிஸ்மக்லோஹின் கூறியிருந்தார்.

“டொப்னர் விளைவானது சமிக்ஞை மையத்தின் பெறுகைப் புள்ளியின் நகர்வை அடிப்படையாகக் கொண்டு விமானத்தின் பயணப் பாதையை கண்டறிவதாகும்.

“மலேசிய விமானத்திலிருந்து பெறப்பட்ட  தரவுகளின் பிரகாரம் அந்த விமானம் தென்திசையினை நோக்கி பயணித்துள்ளதை நாம் சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்துள்ளோம்’ என்றும் மக்லோஹ்லின் கூறியுள்ளார்.

இந்த ஆய்வில் பிரிட்டனின் செய்மதி நிறுவனமான தனியாருக்கு சொந்தமான இன்மார்ஸ்ட் மற்றும் பிரிட்டனின் விமான விபத்து விசாரணைப் பிரிவு ஆகியன இணைந்தே மேற்கொண்டிருந்தன.

அந்தப் பெறுபேறுகளின் அடிப்படையில் மலேசிய விமானம் குறித்த அறிவிப்பினை விடுத்துள்ளது. ஆனால், அந்த அறிவிப்பானது சற்று அவசரமான ஒரு அறிவிப்பாக அமைந்துவிட்டதாகவே கருத முடிகின்றது.
விமானத்தை தேடும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டிருந்த நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. உண்மையில் இவ்விமானத்தில் அதிகளவில் பயணித்தவர்கள் சீனர்கள் (154 பேர்) அவர்களுக்கே அதிகளவான பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது.

இந்நிலையில், சீனா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் இணைந்து இந்த துயரமான முடிவு சரியானதா உண்மையில் அவ்வாறு இடம்பெற்றிருக்குமா என்பதனை ஆராய்ந்து மலேசியா தனது அறிவிப்பை விடுத்திருக்கலாம்.

16 நாட்கள் கடலில் எந்த விதமான முடிவும் கிடைக்கப் பெறாத நிலையில் இந்த சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கத்துடன் மலேசியா இவ்வாறு ஏகமனதாக தனது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியிருக்கலாம்.

இவ்வாறு மலேசியா செயற்படுவதற்கு இவ்விவகாரம் இராஜதந்திர உறவு தொடர்பானதா அல்லது அரசியல் சார் நிகழ்வோ அல்ல. பல்வேறு நாடுகளின் மக்களின் உணர்வுகளுடன் சம்பந்தமான விடயம்.

இந்தத் துயரமான முடிவினை விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்களுக்கு தெரிவிப்பதற்கு மலேசியா குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது. இந்த விடயம் கூட மக்களின் சினத்தை சீண்டும் விடயமாகவே கருதப்படுகின்றது.

இந்த முடிவானது சம்பந்தப்பட்ட தரப்பினை ஓர் இடத்திற்கு அழைத்து அவர்களின் மனங்களை பக்குவப்படுத்தி அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.

அவ்வாறு அறிவிக்காததன் விளைவு உடனடியாக தென்பட்டிருந்தது. உறவினர்கள் சிலர் மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்னர். பலர் கதறி அழுதும் புலம்பியும் தமது கவலைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

அத்துடன் சீனாவில் உள்ள மலேசிய தூதரகத்தின் முன்னால் கூடிய உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் பொலிஸாருடன் மோதலிலும் ஈடுபட்டிருந்தனர்.

இவ்வாறாக மக்களின் உணர்வுகள் வெளிப்பட்டுள்ளது. எத்தனையோ பேர் இன்று மன நிலை பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். ஒவ்வொரு பயணிகளின் உறவினர்களுக்கு 5000 அமெ.டொலர் நஷ்டஈடு வழங்கப்படுமென மலேசியன் எயார்லைன்ஸ் கூறியுள்ளது.

அவ்வாறெனில், மனித உயிர் ஒன்றுக்கு குறிக்கப்பட்ட விலை அதுவா. மனித உயிர் விலைமதிப்பற்ற ஒரு உயர்வான பொருள். பணத்தின் மூலம் அதனை ஈடுசெய்ய முடியாது.

ஆழமான வடுக்களை கொண்டிருக்கும் அந்த உறவினர்களின் மனங்களை இதயங்களிற்கு களிம்பு போடவேண்டியதே இன்றைய தேவை. அவர்கள் மனநிலை பாதிக்கப்படாத வகையில் கவனிக்கப்பட வேண்டும். அதுவே, உண்மையான குணப்படுத்தலாக அமையும்.

மலேசிய அரசின் அறிவிப்பின் பிரகாரம் விமானம் கிட்டத்தட்ட 4860 மைல் தொலைவில் பயணித்து விழுந்துள்ளது. குறிப்பாக விமானம் திசை திரும்பியதாக கூறப்படும் இடத்திலிருந்தே அந்த தூரம் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த தூரத்தில்தான் விமானம் விழுந்துள்ளது எனில், பல்வேறு வினாக்கள் எழுகின்றன. அவ்வளவு தூரம் விமானத்தினால் பயணித்திருக்க முடியுமெனில் அந்த விமானத்தினை ஏன் மலேசியாவிலுள்ள இரு விமான நிலையங்களிலும் அதனை தரையிறக்கி இருக்க முடியாது.

மலேசியாவையும் கடந்து அதிகளவான தூரம் இந்த விமானம் பயணித்துள்ளதனை எளிதில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இயந்திரக் கோளாறு காரணமாக விமானம் விழுந்திருந்தால் அதன் தொடர்பாடல் சாதனங்கள் சடுதியாக ஏன் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதில் சந்தேகம் உள்ளது. வழமைக்கு மாறான முறையில் கட்டுப்பாட்டு அறைக்கு விமானியால் கூறப்பட்ட “குட் நைட்’ போன்ற விடயங்கள் இவ்விமானத்தின் துயரமான அந்தத்துக்கு விமானியை நோக்கியேவிரல்கள் நீள்கின்றன.

இரு பிள்ளைகளின் தந்தையான விமானி ஷகாரி அஃமட் ஹாவுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்ட நிலையில் அவரது மனைவி ஷகாரியை பிரிந்து தனியாக வாழ்ந்துள்ளார்.

இந்நிலையில் விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்கள் முன்னால் ஷகாரிக்கு பெண் ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பொன்றும் விடுக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான பின் புலத்தில் தனது நண்பர் ஷகாரி விமானம் ஒன்றை செலுத்துவதற்கான மனோ நிலையை கொண்டிருக்கவில்லையென அவரது நண்பரான விமானி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த விமானமானது 43000 முதல் 45000 அடி வரையான உயரத்திற்கு பறந்திருப்பதற்கு சாத்தியம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த உயரத்தில் பறக்கும் நிலையில் அழுத்தக் குறைவு காரணமாக ஒட்சிசன் தேவைப்பட்டிருக்குமென கூறப்பட்டுள்ளது. குறித்த உயரத்தில் 23 நிமிடம் விமானம் பயணித்துள்ளது. இதில் 12 நிமிடங்களுக்கே விமானத்திலுள்ள ஒட்சிசனை பயன்படுத்த முடியும்.

மீதி நேரத்திற்குள் விமானம் மீண்டும் 35000 அடிக்கு தாழிறங்காது விடில் விமானத்திலிருந்த அனைவரும் மயக்க நிலையை அடைந்திருப்பர்

இவ்வாறான ஒரு சந்தர்ப்பம் இடம்பெற்றிருந்தால் இறுதித்துளி எரிபொருள் உள்ளவரை விமானம் குறித்த ஒரு நேர்கோட்டில் பயணித்து முடிவில் விழுந்துவிடுமென மத்திய குயீன்ஸ்லாந்து பல்கலைக்கழக விமானத்துறை பேராசிரியர் ரொன் பிஹப் கூறியுள்ளார்.

விமானத்தில் இயந்திரக்கோளாறு மற்றும் பயங்கர வாதத் தொடர்புகள் இவ்விமானத்தின் மறைவுக்கான காரணமல்லவென கூறப்பட்ட நிலையில் விமானத்தின் மறைவுக்கு விமானியின் தான்தோன்றித்தனமான செயற்பாடே காரணமென கூறப்பட்டுள்ளது.

விமானத்தை இவ்வாறான அபாயகரமான வழியில் கப்டன் செலுத்தியிருந்தால் அதனை துணை விமானி ஏன் தடுக்கவில்லை என்ற விடயம் எழுகின்றது.

மேலே கூறப்பட்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது விமானம் உயரப் பறந்த நிலையில் (4300045000 அடியில்) அனைவரும் மூச்சுத் திணறி இறந்திருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன.

அத்துடன், பேராசிரியரின் கூற்றின் அடிப்படையில் விமானம் அதன் எரிபொருள் முடியும்வரை பயணிக்கும் என பேராசிரியர் பிஷப் கூறியுள்ளது விமானம் மலேசியாவின எல்லையில் தென்சீன கடல் வான் பரப்பில் நுழைந்த பின்னர் அது திரும்பியதாக கருதப்படும் புள்ளியிலிருந்து தற்சமயம் சிதைவுகள் உள்ளதாக கூறப்பட்ட அவுஸ்திரேலிய பேர்த் கடற்பிராந்தியம் வரையான தூரம் 4860 மைல்கள் (அண்ணளவாக) விமானத்தின் எரிபொருள் இருப்பு 29335 கலன்கள்.

இந்த எரிபொருள் இருப்புடன் விமானம் அவுஸ்திரேலியா வரை பயணித்திருக்க முடியும். அதாவது மலேசியாவிலிருந்து புறப்பட்டு அது திரும்பிய இடத்திலிருந்து பேர்த் சிதைவுகள் வரையான மொத்த தூரம்.

பேராசிரியரின் கூற்று, எரிபொருள் இருப்பு விமானியின் மனநிலை இம்மூன்றினதும் அடிப்படையில் விமானம் தற்போது அடையாளம் காணப்பட்டதாக கூறப்படும் சிதைவு (பேர்த்) பகுதிவரை பயணித்து விழுந்திருக்க வாய்ப்பு உள்ளது.

இதேவேளை மலேசிய அரசு எந்தவிதமான உருவக அத்தாட்சியுமின்றி விமானம் இந்து சமுத்திரத்தில் விழுந்துள்ளதாக லண்டன் செய்மதி நிறுவன தரவுகளின் அடிப்படையில் கூறுகின்றது.

மேற்கூறப்பட்ட இரு பந்திகளின் தரவுகளின் அடிப்படையில் விமானம் கூறப்பட்ட விதத்தில் விழுந்துள்ளதென்ற முடிவு சாத்தியமானதே.

தனி ஒரு மனிதனின் விருப்பு வெறுப்புக்களால் ஏற்பட்ட விளைவு உலகளாவிய விமானப் பயணத்திற்குக் அச்சுறுத்தலை தோற்றுவித்துள்ளது. எதிர்காலத்திலும் விமானிகள் தமது விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் செயற்பட்டால் விளைவு?

ஒரு பெண்ணினால் விமானி இந்த முடிவினை மேற்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்திருந்தால் அவர் ஏனைய மனித உயிர்கள் மீது இரக்கமற்றவராகவே நடந்துள்ளார் என்பது கண்கூடு.

இறுதிநேரத்தில் விமானிக்கு அழைப்புவிடுத்த அந்தப் பெண்ணை கண்டுபிடித்து விசாரணைக்கு உட்படுத்துவதன் மூலம் உண்மையில் விமானியின் பயணத்தின் முன்னரான இறுதி தருணத்தில் ஏற்பட்ட பிரச்சினையினை அறிந்து கொள்ளலாம்.

ஆனாலும், இவ்விவகாரத்திற்காக 238 பேரை தன்னுடன் சேர்த்து அபத்தமான ஒரு முடிவுக்கு கொண்டு சென்றமை அரக்கத்தனம் நிறைந்த ஒரு செயல்.

இதேவேளை மலேசியா இந்த முடிவினை முன்னரே அளித்திருந்தால் 16 நாட்களை வீணடிக்காது பேர்த் பகுதியில் விரிவான தேடுதலை மேற்கொண்டு விரைவான ஒரு முடிவு கிடைக்கப்பெற்றிருக்கும் என்பது பாதிக்கப்பட்டவர்களின் விவாதம்.

ஆனால், இந்த விமானத்தை கண்டறிவதில் எமது தொழில்நுட்ப உலகம் தோற்றுவிட்டதென்பதே உண்மை.

கறுப்புப் பெட்டியை கண்டுபிடிப்பதற்கு சிலவேளைகளில் வருடங்கள் கூட ஆகலாமெனக் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு சம்பவம் எதிர்காலத்தில் ஏற்படும்போது அந்த விமானத்தின் இருப்பிடத்தினை உடனடியாக கண்டுபிடிக்கும் வகையிலான சாதனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு விமானத்துடன் பொருத்தப்பட்டாலே இதனை ஒத்த பிரச்சினைகளில் உடனடி தீர்வு கிடைக்கும்.

அத்துடன் கறுப்புப் பெட்டியினை எவ்வாறு விமாயினால் கட்டுப்படுத்த முடியாதோ, அது எவ்வாறு அழிவுகளுக்கு அப்பாற்பட்டதோ அதனை ஒத்த வசதிகளுடன் விமானத்தின் இருப்பிடத்தை தெரிவிக்கும் சாதனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட வேண்டும். அதனை உருவாக்க வேண்டியது நமது தொழில்நுட்ப உலகின் கைகளில் உள்ளது.

இதேவேளை, தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக அவுஸ்திரேலியா தேடுதல் முயற்சியில் மீண்டும் களமிறங்கியுள்ளது.

கறுப்புப் பெட்டி கிடைத்தாலும் விமானம் ஏன் திசை திருப்பப்பட்டது என்ற கேள்விக்கான விடை கிடைப்பது கடினம். இந்த நிலையில் தொடர்கிறது கறுப்புப் பெட்டிக்கான காத்திருப்பு...


நன்றி தினக்குரல்

தொடரும் தேடலில் துலங்காத மர்மம்



* MH 370 மாயமாகி இருவாரங்கள் கடந்த நிலையிலும் உறுதியான முடிவுகள் இல்லை.


கடந்தவாரம் MH 370 விமானம் தொடர்பான பத்தியினை எழுதும்போது அப்பத்தியானது இவ்வாரமும் தொடரும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால், விமானம் தொடர்பான சரியான தகவல்கள் கிடைக்கப்பெற்று அவ்விவகாரத்தின் பெறுபேறாக விமானம் கண்டுபிடிக்கப்பட்டுவிடும் என்ற நம்பிக்கை இருந்தது.

இவ்வாரமும் இவ்விடயம் தொடர்பாகத்தான் செய்திகளுக்கும் பத்திகளுக்கும் ஊடகங்கள் முக்கியத்துவம் வழங்கவேண்டுமென்பது காலத்தின் கட்டாயமாகியது. ஆனால், அடுத்தவாரமும் இதே விவகாரம் தொடரப் போகின்றமை சற்று அலுத்துப்போகும் விடயம் என்றாலும் Mh 370 தொடர்பான தகவல்களுக்காக இனம், மதம், தேசம், வயது, பால் எந்தவிதமான வித்தியாசமும் இன்றி சகலரும் காத்திருக்கும் நிலை காணப்படுகின்றது.

தொலைக்காட்சியில் கார்டூன் தொடரைப் பார்த்துக்கொண்டிருந்த தனது மகனான முதலாம்தர மாணவனே இவ்விமான  விபத்து தொடர்பாக தனக்கு முதலில் தெரியப்படுத்தியதாக கூறுகின்றார் ஆசிரியரான தந்தை ஒருவர்.






கார்டூன் இடையில் விசேட செய்தியாக அந்த விமானம் காணாமல் போயுள்ளமை குறித்த செய்தி அறிவிக்கப்பட்ட நிலையில் அதனை தனது தந்தையிடம் கூறியுள்ளான் அந்தப் பாலகன்.
அன்று முதல் Mஏ 370 குறித்த நல்ல செய்தியை அறிய தன்னைக் காட்டிலும் தனது மகன் ஆர்வத்துடன் உள்ளதாக கூறுகின்றார் அந்த ஆசிரியர். இவ்வாறாக இந்த பாலகன் வரை அந்த விமானம் குறித்த செய்தி மிகவும் ஆழமான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைனில் கிரிமியா விவகாரம், சிரியாவில் நிறைவுறாத உள்நாட்டு கிளர்ச்சி, ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளான மும்முனையில் அரசியல் சார்பு செய்திகளுக்காக ஊடக உலகமும் மக்களும் வேட்கை கொண்டவர்களாக காணப்பட்டிருந்த நிலையில், இந்த ஒட்டுமொத்த வேட்கையினையும் தன்பால் ஈர்த்துக்கொண்டது Mஏ 370 விமானம்.

அதற்கு சமாந்தரமாக சமூக வலையமைப்புக்களில் இச்சம்பவம் தொடர்பான செய்திகள் முக்கியத்துவம் பெற்றிருந்தன. மார்ச் 8இன் பின்னர் ருவிட்டரில் அதிகப்படியாக பயன்படுத்தபட்ட குறிச்சொல்லாக #Mஏ 370 என்பது இன்றுவரை தனது இருப்பை தக்கவைத்துள்ளது.

அதேவேளை பேஸ்புக்கினை எடுத்துக்கொண்டால் இன்றைய நிலையில் “நான் குளியலறை செல்கின்றேன்’ என்பதை கூட பதிப்பிவிடும் ஒரு தளமாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால், பேஸ்புக்கில் Mஏ 370 தொடர்பாக  உண்மைகளுக்கு புறம்பான தகவல்கள் போலியான படங்களுடன் வெளியிடப்பட்டு தவறான செய்திகள் பல மக்கள் மத்தியில் பரப்பப்பட்டுள்ளன. ஏன் இந்த அநாவசிய செயற்பாடுகள். இதே விமானத்தில் நமது உறவினர்களோ அல்லது நண்பர்களோ பயணித்திருந்தால் இவ்வாறான சித்து விளையாட்டுகளில் ஈடுபட்டிருப்போமா என்பதனை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தமது உறவினர்கள் நண்பர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அறியக்கூட முடியாத நிலையில் நாளாந்தம் துடிதுடித்துக் கொண்டிருப்பவர்களின் உணர்வுகளுடன் விளையாட வேண்டிய தேவை இல்லை. பேஸ்புக்கில் Mஏ 370 தொடர்பான செய்திகள் பல்வேறு வடிவங்களில் போலியாக சித்தரிக்கப்பட்டிருந்தமை மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.

பல்வேறு நாடுகளிலும் விமானம் பயணிகளுடன் பாதுகாப்பாக இருக்கவேண்டுமென்ற நம்பிக்கையினை ஊட்டும் பல்வேறு ஏற்பாடுகள் இடம்பெற்றிருந்தன. அப்பயணிகள் உயிருடன் இருக்கவேண்டுமென்பதே அனைவரதும் இலக்காக இருந்துள்ளது. ஆனால், மார்ச் 8இல் காணாமல்போன விமானத்தின் சிதைவுகளென ஒரு துரும்பைக்கூட இன்னமும் கைப்பற்றாத  நிலைமை அதி திறன் கொண்ட எமது தொழில்நுட்ப உலகின் வெட்கக்கேடான விடயம்.

கோலாலம்பூரிலிருந்து கடந்த 8ஆம் திகதி நள்ளிரவு 12.41 மணியளவில் 227 பயணிகள் 12 விமான சிப்பந்திகளுடன் சீனா நோக்கி புறப்பட்ட Mஏ 370 அதிகாலை 01.21 மணியளவில் விமானகட்டுப்பாட்டு அறையுடனான சகல தொடர்புகளையும் துண்டித்திருந்தது.

அதன்பின்னர் விமானத்தை காணவில்லையென அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக தாய்லாந்து குடா, தென்சீன கடல் ஆகிய பகுதிகளில் வியட்னாம், மலேசியா இணைந்து தேடுதல் நடவடிக்கைகைளை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில் விமானம் திசை திருப்பப்பட்டதாக மலேசிய இராணுவ ராடர் பிரதிமைகள் வெளிப்படுத்தியிருந்த நிலையில் மலாக்கா நீரிணை மற்றும் இந்து சமுத்திரம் ஆகிய பகுதிகளில் தேடுதல் நடத்தப்பட்டது. பல நாடுகள் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தன.

விமானம் பாரிய வெளிச்சத்துடன் கடலில் வீழ்ந்ததாக 11 பேர் கூறியிருந்தனர். அந்த அடிப்படையில் தேடுதல் நடத்தியிருந்தும் குறித்த பகுதிகளில் விமானம் கிடைக்கப்பெறவில்லை. “எண்ணெய் கசிவுகள், சிதைவுகள் தென்சீன கடலில் காணப்பட்ட போதும் அவை மலேசிய விமானத்தினுடையதென உறுதிப்படுத்தப்படவில்லை.’

கடந்த 13ஆம் திகதி வியாழக் கிழமை வரை நடைபெற்றிருந்த தேடுதல்களின் பெறுபேறுகள் தொடர்பாக கடந்தவாரப் பத்திரிகையில் விரிவாக அலசியிருந்தோம். இந்நிலையில் 15ஆம் திகதியன்று விமானம் வேண்டுமென்றே திசைதிருப்பப்பட்டிருப்பதாக மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் கூறியிருந்தார். இவ்விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பினை இழந்த பின்னர் 6 மணித்தியாலங்கள் பறந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை தொடர்ந்து பல்வேறு சந்தேகங்கள் தோன்றியிருந்தன. மலேசியாவிலிருந்து சீனாவுக்கான பயணத்தில் இடதுபுறமாக திரும்பிய விமானம் எங்கு சென்றது என்பது தொடர்பான பல்வேறு ஊகங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

தனது வழமையான பாதையிலிருந்து விலகியிருந்த இவ்விமானம் மலாக்கா நீரிணையிலிருந்து வலதுபுறமாக திரும்பியதால் அந்தமான் தீவுப்பகுதிகள், கசகஸ்தான் ஆகிய பகுதிகளில் தரையிறங்கியிருக்கலாமென கருதப்பட்டது.
இப்பகுதிகளில் தரையிறங்குவதானது சாத்தியமானதாக இருக்கலாம். ஆனால், பாரிய விமானம் ஒன்று விமான நிலையம் அல்லாத பகுதிகளில் தரையிறங்க முடியாது. விமான நிலையத்தில் தரையிறங்குவதனால் அதன் தகவல்களை பூரணமாக மறைப்பதற்கு அரசாங்கங்களின் பூரண ஒத்துழைப்பு அவசியமானதாகும். சர்வதேச அளவில் பாரிய சர்ச்சைகளை Mஏ 370 தோற்றுவித்திருக்கும் நிலையில், இவ்விமானத்தை மறைப்பதற்கான முயற்சிகளை அரசாங்கங்கள் மேற்கொண்டிருக்க முடியாது.

அடுத்து இலங்கையின் ஓடுதளங்கள் தொடர்பாக இவ்விமானி அறிந்திருந்த நிலையில் இவர்களால் தரையிறக்கப்பட்டிருக்கலாமென கருதப்பட்டது. இந்த நிலையில் இலங்கையை தளமாக கொண்டிருக்கும் சில ஊடகங்கள் இரணைமடுவினை இலக்குவைத்து செய்திகளை வெளியிட்டிருந்தனர். இரணைமடு விமான ஓடுபாதையானது சர்வதேச அளவில் அறியப்பட்ட ஒன்றல்ல. அத்துடன் பாரிய விமானங்கள் தரையிறங்குத் தளத்துக்கான வசதிகளையும் அது கொண்டிருந்ததாக தெரியவில்லை.

ஆக, இரணைமடு ஓடுபாதை Mஏ 370 இற்கான இறங்குதளமாக இருந்திருக்க வாய்ப்பில்லை என்பது யதார்த்தம். 

விமான விபத்து, இயந்திரகோளாறு போன்ற விடயங்கள் Mஏ 370 தொடர்பாக முற்றாக நிராகரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மார்ச் 16ஆம் திகதி 11 நாடுகளை உள்ளடக்கப்பட்ட பகுதிகளில் 25 நாடுகள் இராணுவ தேடுதல் நடவடிக்கையினை தீரவிப்படுத்தியிருந்தன.
விமானத்தை கடத்துதல், விமானிகள் தற்கொலை ஆகிய காரணங்கள் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டிருந்தன. விமானம் கடத்தப்பட்டிருக்கலாமா என்பது தொடர்பாக ஆராயப்பட்டிருந்தால் அது இல்லை என்பதே விடை.

ஏனெனில், இந்த விமானத்தை கடத்துவதற்குரிய நோக்கம் இருந்திருக்க வேண்டும் அல்லது கடத்தியவர்கள் தமது நிபந்தனைகளை முன்வைத்திருப்பர். அல்லாதுவிடில் விமானத்தை எங்கு சரி மோதி தாக்குதலை மேற்கொண்டிருக்க வேண்டும். இவையும் நிகழவில்லை. ஆக விமானத்தினை கடத்தும் முயற்சி சாத்தியப்படாத ஒன்றாகவே இருக்கின்றது.
விமானிகளின் தற்கொலை என்ற விடயத்தினை ஆராய்ந்திருந்தால் ஒரு விமானி தற்கொலைக்கு முயற்சிக்கலாம். ஆனால், இரு விமானிகளும் இணைந்து தற்கொலைக்கு முயற்சிக்க வேண்டிய தேவையில்லை. அதேவேளை, ஒரு விமானி தற்கொலைக்கு முற்பட்டிருந்தால் மற்றவர் “அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு அங்கு இருவரிடையேயும் மோதல்கள் ஏற்பட்டிருக்கும். அதற்கான வாய்ப்புகளும் இல்லை. ஒருவேளை நடந்திருந்தாலும் அறிவதற்கான சாத்தியங்கள் இல்லை.

விமானத்தை கடலில் வீழ்த்தி தற்கொலைக்கு முயற்சிக்கும் விமானி ஏன் அந்த விமானத்தை திசைதிருப்பி மலாக்கா நீரிணை, இந்து சமுத்திரம், அவுஸ்திரேலிய கடற்பரப்பு போன்ற பகுதிகளுக்கு செலுத்தவேண்டும். மலேசியாவுக்கும் வியட்னாமுக்கும் இடையிலான கடற்பிராந்தியத்தினுள்  விமானத்தை விழுத்தி தற்கொலை செய்திருக்கலாம். ஏனைய தூரப் பிரதேசங்களுக்கு செல்லவேண்டிய தேவையில்லை. 

இதேவேளை இரு விமானிகளில் ஒருவரான கப்டன் ஜகாரி அஹமட் ஹோ மீது கொண்ட சந்தேகம் காரணமாக விமானியின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அவரது வீட்டில் விமானத்திற்கான சிமுலேட்டர் ஒன்று மீட்கப்பட்டது. அது ஜகாரியினால் உருவாக்கப்பட்டதாகும். இந்த சோனையின் பின்னரான கேள்விகளின் அடிப்படையில் பல கேள்விகள் எழுந்துள்ளன. ஜகாரிக்கும் எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிமும் இடையிலான தொடர்பு குறித்து பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஜகாரி அன்வர் இப்ராஹிமின் தீவிர ஆதரவாளர் எனக் கூறப்பட்டுள்ளது. அவர் மார்ச் 7ஆம் திகதி அன்பர் இப்ராஹிமின் வழக்கொன்றிற்காக நீதிமன்றம் சென்றிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் தனது டி.சேர்ட்டில் ஜனநாயகம் மரணித்துவிட்டதென்ற வாசகத்துடன் இருந்தமை வெளியாகியுள்ளது. ஆனால், இந்த விமானம் கடத்தப்பட்டமை தொடர்பாக இப்ராஹிம் மீது பொலிஸார் சந்தேகம் கொண்டிருந்தால் அவரை விசாரணைக்கு உட்படுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு எதனையும் அவர்கள் செய்திருக்கவில்லை.

இவ்வாறான நிலையில் மார்ச் 20ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் பேர்த்திலிருந்து தென்மேற்காக 1350 மைல் தொலைவில் விமானத்தின் சிதைவுகளாக இருக்கக்கூடும் என ஊகித்த இரு சிதைவுகளை அவுஸ்திரேலியா தமது செய்மதிகள் மூலம் அடையாளம் கண்டுள்ளதாக பிரதமர் டொனி அபெட் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

உலகமே தேடிக்கொண்டிருக்கும் விமானம் குறித்த தகவல்களை துரிதமாக அறிக்கையில் பாராளுமன்றம் சென்று அறிவிக்க வேண்டிய தேவை என்ன? என்ற சந்தேகம் எழுகின்றது. 

தற்போதைய நிலைவரத்தின்படி அவுஸ்திரேலிய சிதைவுகளே திருப்பு மையமாக அமைந்துள்ளன. சிதைவுகள் காணப்பட்ட பகுதியானது மலேசியா விமானம் திரும்பியதாக சந்தேகிக்கப்படும் பகுதியிலிருந்து கிட்டத்தட்ட 4565 மைல் தொலைவில் உள்ளது. ஆனால், விமானத்தின் பயண இலக்கான சீனா கோலாலம்பூரிலிருந்து 2685 மைல் தொலைவில் 6 மணித்தியால பயணத்தை கொண்டது.

அந்த அடிப்படையில் மணித்தியாலத்துக்கு 443 மைல் பயணிக்க முடியும். விமானம் கோலாலம்பூரிலிருந்து புறப்பட்டு தொடர்பு துண்டிக்கப்படும் வரை கிட்டத்தட்ட (12:4101:21) 295 மைல்களை கடந்திருக்க வேண்டும். இந்நிலையில் மீதம் உள்ள எரிபொருள் உதவியுடன் 5 மணித்தியாலங்களுக்கு விமானத்தினால் பறக்கமுடியும்.

Mஏ 370 விமானம் 29335 கலன் (117340 லீற்றர்) எரிபொருள் வசதியை கொண்டது. விமான பயணத்துக்கு ஒரு செக்கனுக்கு ஒரு கலன் எரிபொருள் தேவையென்ற அடிப்படையிலும் ஒரு மைலுக்கு 5 கலன்கள் தேவை என்ற அடிப்படையில் Mஏ 370 விமானம் 29335 கலன் எரிபொருளை கொண்டிருந்தால் அதனால் மொத்தமாக 5867 மைல் தூரத்தை அல்லது 8.01 மணித்தியாலத்தில் பயணிக்க முடியும். அதனிலும் அதிகமான தூரம்/ நேரம் பயணிக்க முடியாது.

கோலாலம்பூரிலிருந்து புறப்பட்ட விமானம் திரும்பியதாக கருதப்பட்ட இடம் ஊடாக அவுஸ்திரேலியாவில் விமான சிதைவுகள் உள்ள பகுதிவரையான மொத்த தூரம் அண்ணளவாக 4860 மைல்கள், விமானத்தினால் பயணிக்க கூடிய தூரம் 5867 மைல்கள். அந்த அடிப்படையில் விமானம் அதுவரை சென்றிருக்க சாத்தியம் உள்ளது.

இந்நிலையில் அங்கு மீட்கப்பட்வை விமானத்தின் சிதைவுகளாக இருக்கலாம். ஆனால், உறுதிப்படுத்தப்படவில்லை.  இவ்வாறான நிலையில் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கை பேர்த்திலிருந்து தென்மேற்காக 1300 மைல் தொலைவிலுள்ள கடற்பிராந்தியத்தில் பல்வேறு நாடுகளினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சில சந்தர்ப்பங்களில் அந்த சிதைவுகள் Mஏ 370 உடையதாக இருந்தால், அவ்விமானம் அப்பகுதிவரை பயணித்துள்ளதன் மர்மம் என்ன என்பதே இப்பொழுது எழும் கேள்வியாகும்.

அந்த விமானி ஏன் அவ்வளவு தூரம் விமானத்தை செலுத்தினார், வேண்டுமென்றே அவர் விமானத்தை கடலில் விழுத்தினாரா அவ்வாறு அவர் செய்வதற்கு தூண்டிய காரணம் என்ன என்ற கேள்விகளே எதிர்காலத்தில் சர்ச்சைக்குரிய விடயங்கள்.

குறித்த இடத்தில் விமானம் விழுந்திருந்தால் விமானம் விபத்துக்குள்ளாகவில்லை என்பது உறுதி. ஏனெனில், ஆபத்து ஏற்பட்டிருப்பின் முன்னரே மலேசியாவுக்கு அண்மித்த பகுதியில் விமானம் விழுந்திருக்க வேண்டும். அல்லது விமானத்தால் மலேசியாவின் இரு விமான நிலையங்களிலும் தரையிறங்க முயற்சித்திருந்தாலும் அது மலேசியாவை அண்மித்த பகுதியிலேயே  விழுந்திருக்கவேண்டும்.

இவ்வாறான நிலையில் விமான சிதைவுகள் அவுஸ்திரேலிய கடற்பரப்பில் மீட்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டால் இந்த விமானத்தின் மர்மத்துக்கு விமானியே முழுக்காரணமாக வேண்டும். தொடர்ந்தும் விமானம் குறித்த ஆராய்ச்சிகளும் தேடல்களும் முன்னெடுக்கப்பட்டாலும் விமானத்தை எவராது கடத்தி சென்று தரையிறக்கியிருக்க மாட்டார்களா என்பதிலேயே அனைவரினதும் எண்ணம் இறுக்கமாக உள்ளது. 


யோ.நிமல்ராஜ் 
நன்றி தினக்குரல்