ஜனநாயக ஆட்சிக்காக ஒன்றிணையுங்கள்

மியன்மாரில் கோரத்தாண்டவமாடிய நர்க்கீஸ் சூறாவளியும் உலக சந்தையில் அரிசியின் தட்டுப்பாடும்?



இராணுவ ஆட்சியின் இரும்புப் பிடியில் சிக்கித் தவிக்கும் மியன்மாரை கோரத்தாண்டவமாடி சின்னாபின்னமாக்கி சிதறடித்துச் சென்றுள்ளது நர்க்கீஸ் சூறாவளி என்று கூறுமளவிற்கு நர்க்கீஸின் தாக்கம் அந்நாட்டில் ஊன்றிப் பதிந்துள்ளது.

உலகளவில் எந்தளவிற்கு ஆக்கபூர்வமான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றதோ இல்லையோ இயற்கை, செயற்கை ஆகிய இரண்டும் இணைந்து, மனிதப் படுகொலைகளையும் பொருளாதார ரீதியிலான பாதிப்புகளையும் தொடர்ந்தும் ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன.

கடந்த 2004 ஆம் ஆண்டின் நிறைவுப் பகுதியில் கடல்கோள் அனர்த்தத்தின் மூலம் இந்து சமுத்திரத்தை அண்மித்த பல நாடுகளிலிருந்து இரண்டு இலட்சத்து முப்பதாயிரத்துக்கும் அதிகமான மனித உயிர்கள் காவு கொள்ளப் பட்டு அதன் வடுக்கள் இன்னமும் அழிந்தும் அழியாத நிலையிலுள்ளன.

இதேவேளை இக்கடல்கோள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சர்வதேசத்திலிருந்து நிவாரண உதவிகள் அந்தந்த அரசுகளிடம் ஒப்படைக்கப்பட்டும் இன்னமும் உரியவர்களுக்கு போய்ச் சேராமல் இடைத்தரகர்களின் கைகளில் அகப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடந்தவாரம் சூறாவளியும் பெரும் புயல் காற்றும் மியன்மாரில் கோரத்தாண்டவமாடியதில் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் பேர் வரை பலியாகி இருக்கலாமென அஞ்சப்படுவதுடன், மேலும் பல்லாயிரக் கணக்கானவர்கள் காணாமலும் போயுள்ளனர்.

உலகின் மிகமிக மோசமான பேரனர்த்தங்களில் ஒன்றாக கருதப்படும் இச்சூறாவளியில் மியன்மாரின் பல நகரங்கள் அழிந்துள்ளமையாலும் மீட்புப் பணிகள் சற்றுத் தாமதமாகவேனும் தொடர்ந்து நடைபெறுவதாலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையையோ அல்லது காணாமல் போயிருப்பவர்களின் எண்ணிக்கையையோ சரியாகவும் உறுதியாகவும் கூறமுடியவில்லை.

இதேவேளை பலியானவர்களில் பெரும்பாலான எண்ணிக்கையில் சிறுவர்கள்தான் அடங்குகின்றனரென்பது மற்றுமொரு அனர்த்தமாகவுள்ளது.

புயல் சூறாவளி என்பவைதான் மியன்மாரைத் தாக்கியிருந்தாலும் நகருக்குள் புகுந்த கடல்நீர்தான் பெரும்பாலானவர்களை இழுத்துச் சென்றுள்ளதென்றும் கூறப்படுகின்றது.
இதற்கு ஆதாரமாக கரையோர நகரொன்றில் வாழும் இருநூறோ அல்லது அதற்கு அண்மையிலமைந்த எண்ணிக்கையிலான குடும்பங்கள் முற்றாக கடல் நீரினால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளன.
சுமார் பதின்மூன்று அடி உயரத்துக்கும் மேலாக எழுந்த கடலலைகள் கரையோரப் பிரதேசங்களில் இருநூறு மீற்றர் தூரம்வரை உட்சென்று தாக்கியுள்ளது.
மணிக்கு 120 கிலோ மீற்றர் வேகத்தில் தாக்கிய இப்புயலினால் இதுவரை இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டிருப்பதுடன், பத்து இலட்சம் பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

ஒட்டுமொத்தமாக 1.5 மில்லியன் மக்கள் இச்சூறாவளியினால் பாதிக்கப்பட்டுள்ளனரெனில் மியன்மாரின் மொத்த சனத்தொகையுடன் ஒப்பிடுகையில் இது ஏழில் ஒரு வீதமாகும்.
அதேவேளை வரலாறு காணாத இச்சூறாவளி மற்றும் புயலினால் ஏற்பட்ட மரணங்களால் சனத்தொகையில் சடுதியானதொரு இறக்கத்தையும் அவதானிக்க முடிகின்றது.

இக்கடும் சூறாவளி மற்றும் புயல் தாக்கியதைத் தொடர்ந்து நிர்க்கதிக்குள்ளாகியிருக்கும் மியன்மாரின் பல இலட்சக்கணக்கான மக்கள் பசியாலும், தொற்று நோய்களாலும் அவதிப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.நாட்டின் பெரும்பாலான குடிநீர் ஊற்றுக்கள் பாவனைக்கு உதவாத வகையில் அசுத்தமாக்கப்பட்டுள்ளன.

குடிப்பதற்கு நீரோ உண்பதற்கு உணவோ இன்றித்திண்டாடும் அந்நாட்டு மக்களுக்கு அனைத்து வகையான அவசர உதவிகளையும் வழங்குவதற்கு சர்வதேச உதவி அமைப்புகளும், உலக நாடுகளும் மியன்மாரை நோக்கிய அனுதாப உதவிப் பயணத்தை மேற்கொண்டிருந்தன.

இருந்தாலும் உதவிப் பொருட்களுடன் விமானங்கள் நடுவானில் திருப்பப்பட்டு இராணுவ அரசின் அநீதியான கட்டுப்பாடுகளை ஏற்க மறுத்து திரும்பிச் சென்றுள்ளன.
இந்நிலையில் சர்வதேச உதவிப் பணியாளர்களையும் நிவாரண உதவிகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை மியன்மார் அரசை வலியுறுத்தியிருந்தது.
ஆனால் சர்வதேச உதவிப் பணியாளர்களையும் நிவாரணப் பொருட்களையும் பர்மா இராணுவ அரசு ஏற்க மறுத்தது.

இதேவேளை வெளிநாட்டு உதவிகளை தாம் ஏற்கத் தயாரென்றும் அதன் விநியோகத்தை தமது கைகளிலேயே வைத்துக் கொள்வதென்றும் பர்மா அறிவித்தது.

ஆனால் வெளிநாட்டு உதவிகளை பெற்று அதனை தேவையான இடத்துக்குச் சென்று விநியோகிக்கக் கூடிய வலுவை பர்மா இராணுவம் கொண்டிருக்கவில்லை.

இவ்வாறான காரணங்களினால் பெருமளவிலான நிவாரணப் பொருட்கள் திரும்பிச் சென்றுள்ளமை கவலைதரும் விடயமாகும்.
மேலும் உதவிப் பணியாளர்களை பர்மாவுக்குள் அனுமதிக்க உடனடியாக விசாவினை பர்மா வழங்க வேண்டுமென்று ஐ.நா.வால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் உதவிப் பணியாளர்களை அனுமதிப்பதற்கு மியன்மார் இராணுவ அரசு எளிதில் சம்மதிக்காதென உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

மனிதநேயப் பணியாளர்களை தனது நாட்டுக்குள் வரவேண்டாமென இதுவரை எவரும் தடுத்ததில்லை. வரலாற்றில் முதற்றடவையாக மியன்மார் அரசால் பணியாளர்களுக்கு அனுமதிமறுக்கப்பட்டும் நிவாரண உதவிகளும் மறுக்கப்பட்டுள்ளன.

உண்பதற்கு உணவின்றியும் குடிப்பதற்கு நீர் இன்றியும் தவிக்கும் தன்நாட்டு மக்களுக்கு அத்தியாவசியத் தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாத நிலையில் இருக்கும் மியன்மார் அரசு ஏனைய நாடுகளின் உதவியை வரவேற்றிருக்க வேண்டும்.

இருபது இலட்சம் மக்களுக்கு உடனடியாக அவசர உதவி தேவைப்படுகிறது. ஆனால் இதுவரை ஒரு இலட்சம் மக்களே உதவியைப் பெற்றுள்ளனர்.

தற்காலிக புகலிடங்களில் மக்கள் வசித்துவருகின்ற அதேநேரம் அங்கு அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் தோன்றியுள்ளது.
உலக சந்தையைப் பொறுத்தவரையில் அரிசியின் சந்தைப்படுத்தலில் மியன்மாரின் பங்கு இன்றியமையாத தொன்றாக இருந்து வந்தது.

ஏனெனில் விற்பனைக்குத் தேவையான பெரும்பாலான அரிசியை மியன்மார் தொடர்ந்து ஏற்றுமதி செய்து கொண்டே இருந்தது.
ஆனால் இச்சூறாவளி மூலம் மியன்மாரிலுள்ள பெரும்பாலான வயல் நிலங்கள் நெற்பயிர்ச்செய்கையை குறிப்பிட்டதொரு காலத்திற்கு மேற்கொள்ள முடியாதளவிற்கு சேதத்திற்குள்ளாகியுள்ளது.

இதனால் என்றுமில்லாதவாறு தனக்குத் தேவையான அரிசியையே வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை மியன்மாருக்கு ஏற்பட்டுள்ளமை வருந்தத்தக்கதொரு விடயமாகும்.

மியன்மாரிலிருந்து அரிசி இறக்குமதி செய்வதில் ஈடுபட்ட ஆசிய நாடுகளே இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை ஆசியப் பிராந்தியத்தில் ஏற்கனவே இருந்துவரும் உணவுத் தட்டுப்பாட்டுடன் மியன்மாரின் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டமையும் இணைந்து உணவு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும் அதேவேளை, ஆசியப் பிராந்தியத்தில் 1.5 பில்லியன் மக்கள் பட்டினியை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி எச்சரித்துள்ளது.
மியன்மாரைத் தாக்கிய சூறாவளியினால் மியன்மார் மட்டுமன்றி அதனைச் சார்ந்திருந்த நாடுகளும் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றன.

மியன்மாரைச் சூறாவளி தாக்கிய ஐந்து தினங்களிலேயே உலக சந்தையில் அரிசியின் விலையில் சடுதியான ஏற்றமும் தட்டுப்பாடும் நிலவியுள்ளது.

கடந்த 1991 இல் பங்களாதேஷில் ஏற்பட்ட சூறாவளியில் 143,000 உயிர்கள் காவுகொள்ளப்பட்டதை தொடர்ந்து மியன்மாரில் தற்போது ஏற்பட்டுள்ள உயிரிழப்பு அடுத்தபடியாக உள்ளது.

ஒருபுறம் இராணுவ அரசின் கொடுங்கோல் ஆட்சியும் அதனை எதிர்த்து பிக்குகள் நடத்திய ஆர்ப்பாட்டமும் அவற்றை இரும்புக்கரம் கொண்டு அடக்கிக் கொண்டிருக்கும் இராணுவ அரசின் தாக்குதலில் பலியானவர்களும் பாதிக்கப்பட்டவர்களும் இன்னமும் அத்துயரிலிருந்து மீளாதவர்களாய் காணப்படுகின்ற நிலையில் இச்சூறாவளி அந்நாட்டில் தனது கைவரிசையையும் வெகுவாகக் காட்டியுள்ளது.

தொடர்ந்தும் உலக நாடுகள் இவ்வாறான இயற்கையின் சீற்றங்களை முற்கூட்டியே அறிந்து கொள்ளக் கூடிய கருவிகளை கண்டுபிடிக்க வேண்டும்.

வரலாறு காணாதளவிற்கு தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி காணப்படும் நிலையில் இயற்கை அனர்த்தங்கள் நிகழப்போகிறதென்பதை முற்கூட்டியே உணரக்கூடிய கருவிகள் கண்டுபிடிக்கப்படவேண்டும்.

அவற்றின் மூலம் உடனடியாக அவ் இயற்கை அனர்த்தம் தாக்கப்போகும் பகுதிகள் இனங்காணப்பட்டு அப்பகுதி மக்கள் இயலுமானவரை வேறு பிரதேசங்களுக்குச் சென்றோ அல்லது பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றோ தமதுயிரை பாதுகாக்க முடியும்.

ஒரு இயற்கை அனர்த்தம் ஏற்படுவது தொடர்பாக அறியக்கூடிய சாதனங்கள் தற்பொழுதும் இருக்கின்றனதான். ஆனால், அதன்மூலம் சமிக்ஞைகள் பெறப்பட்டாலும் மக்கள் எவ்வளவு தூரம் பாதுகாக்கப்படுகின்றார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இயற்கை அழிவு ஒன்று ஏற்படப்போகிறதெனில் அது தொடர்பான எச்சரிக்கை அனைவருக்கும் உடனடியாக செல்லக்கூடிய வசதிகள் ஏற்படுத்தப்படவேண்டும்.

இவ்வாறான இயற்கையின் சீற்றங்களைக் கட்டுப்படுத்த உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் உறுதியானதொரு நிலைப்பாட்டினை அனைத்துலக நாடுகளும் கொண்டிருப்பதன் மூலம் உயிரழிவுகளிலிருந்து பாதுகாக்கலாம்.

நன்றி
ஞாயிறு தினக்குரல்