
உலகில் மனிதனின் இருப்பைக் கேள்விக்குறியாக்குமளவிற்கு இயற்கை அனர்த்தங்கள் அதிகரித்தவண்ணமிருப்பது நிச்சயமாக மனிதனின், ஏன் உலகின் இருப்பையே சந்தேகத்திற்குள்ளாக்கியுள்ளது.
ஆம், அந்தளவிற்கு அண்மையில் ஆசியப் பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ள இரு பேரனர்த்தங்கள் அவ்வாறு சிந்திக்கத் தூண்டியுள்ளது.
உலகு கண்ட கொடூரமான இயற்கைப் பேரனர்த்தங்களில் ஒன்றாகப் பேசுமளவிற்கு கடந்த பன்னிரெண்டாம் திகதி சீனாவை உலுக்கியுள்ளது பூகம்பம்.
இது ஒருபுறமிருக்க, மியன்மாரில் தனது கைவரிசையை காட்டிச் சென்ற நர்க்கீஸ் சூறாவளியில் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் பேர் வரையில் பலியாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை, மேலும் பலரின் நிலைமை விடைபெறமுடியாத கேள்விகளாகவே உள்ளமை மேலும் அதிர்ச்சி தரும் விடயமாகவுள்ளது.
இவ்வாறானதொரு நிலையிலும் பெரும்பாலான மியன்மார் மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு கை நீட்டுகின்றபோதும் அவர்களின் கைகளிற்கு பதில் கொடுக்கவோ அல்லது பதில் கொடுக்க முன்வருபவர்களுக்கு இடமளிக்கவோ இல்லை மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர்கள்.
இவ்வாறான நிலையிலும் மக்களுக்கு கொடுக்கப்படவேண்டிய முக்கியத்துவம் மியன்மார் அரசால் வழங்கப்படவில்லை.
மியன்மாரில் நர்க்கீஸின் தூறல் நின்றுவிடாத நிலையில் மற்றுமொரு ஆசிய நாடான சீனாவில் பூகம்பம் தலைவிரித்தாடி குடும்பங்களை சிதைத்தும் குழந்தைகளை அநாதைகளாக்கியுமுள்ளது.
சீனாவின் தெற்குப் பகுதியிலுள்ள சிஞ்சுவான் மாகாணத்தில் 7.8 மக்னிரியூட் அளவில் கிளம்பிய பூகம்பம் சிஞ்சுவானை அண்மித்த பகுதிகளில் ஊடுருவித் தனது பலத்தை நிரூபித்துக் காட்டியுள்ளது.
பன்னிரெண்டாம் திகதி பகல் 14.28 மணியளவில் பூகம்பம் தோன்றியதால் சீனாவின் அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் அதிகமாகக் காணப்பட்டனர்.
அலுவலகங்களோ பாடசாலைகளோ மூடப்படாமல் கடமை நேரத்தில் இருந்தமையும் ஒரே நேரத்தில் குறிப்பிட்டதொரு இடத்திலிருந்து பெருமளவான உயிர்களை காவுகொள்வதற்கு காரணமாயிற்று.
பூகம்பம் தாக்கிய பகுதிகளிலிருந்த எட்டுப் பாடசாலைகள் சேதமடைந்திருப்பதாகக் கூறப்படும் அதேவேளை, ஒரு சில பாடசாலைகள் முற்றாக நிலத்துள் புதைந்துவிட்டதென்றும் பாடசாலை ஒன்றிலிருந்த 900 மாணவர்களின் உயிர்களும் பறித்துக் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை கிடைத்த தரவுகளின் அடிப்படையில் 22 ஆயிரத்து அறுபத்து ஒன்பது பேரின் இறப்புகள் உறுதிப்படுத்தப்பட்டிருந்தாலும் இத்தொகை ஐம்பதாயிரமாகவோ அல்லது அதற்கு அப்பாலோ அதிகரிக்கலாமென அஞ்சப்படுகின்றது.
கடந்த 1976 ஆம் ஆண்டில் சீனாவில் தோன்றிய தங்சான் பூகம்பத்தில் இரண்டு இலட்சத்து 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
அதற்குப் பின்னர் அவ்வாறானதொரு தொகையைப் பலிகொண்ட பூகம்பத்தை சீனா கண்டிராவிடினும் 1947 இல் 6.4 மக்னிரியூட் அளவில் தாக்கிய பூகம்பத்தில் 50 பேர் பலியானதுடன் 40க்கும் அதிகமானோர் காயமடைந்தும் 1997 ஏப்ரல் 6.6 ரிச்டர் பூகம்பத்தில் 9 பேரும், 1998 ஜனவரியில் 6.2 ரிச்டரில் தோன்றிய பூகம்பத்தில் 47 பேரும், 2003 பெப்ரவரியில் 6.8 ரிச்டரில் தோன்றிய பூகம்பத்தில் 94 பேரும் பலியாகியிருந்தனர்.
ஆனால், கடந்த 2008 மார்ச்சிலும் 7.2 ரிச்டர் அளவில் பூகம்பம் ஒன்று சீனாவைத் தாக்கியிருந்தும் உயிரிழப்புகள் ஏற்படுமளவிற்கு அதன் தாக்கம் அமைந்திருக்கவில்லை.
அத்துடன், கட்டிடத்தின் சேதங்களும் மிகவும் குறைவாகவே இருந்தமை, இன்றைய மற்றும் முன்னைய காலங்களில் தோன்றிய பூகம்பங்களின் அளவுகளுடன் ஒப்பிடுகையில் அதிசயிக்கத்தக்கதாகின்றது.
இந்நிலையில் கடந்த 12 ஆம் திகதி 7.8 ரிச்டர் அளவில் முதலாவது பூகம்பமும் சற்றுப் பின்னர் 5.9 ரிச்டர் அளவில் இரண்டாவதும் தோன்றியிருந்தது.
முதலாவதில்தான் பாரிய அனர்த்தங்கள், கட்டிட அழிவுகள் ஏற்பட்டிருந்தாலும் இரண்டாவதில் வாகனங்கள் மற்றும் தொலைத்தொடர்பு என்பன மட்டுமே பாதிக்கப்பட்டது.
இப்பூகம்பத்தின் தாக்கத்தினால் 4.8 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்து தற்காலிக புகலிடங்களில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் சீன ஜனாதிபதி ஹுஜிந்தாவோ சேதங்கள் ஏற்பட்ட இடத்திற்கு நேரடி விஜயம் மேற்கொண்டு மீட்புப் பணிகளை பார்வையிட்டுள்ளமை, அந்நாட்டில் மக்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலிருக்கும் அந்நியோன்யத்தை வெளிக்காட்டியுள்ளது.
பாடசாலைக் கட்டிடங்களின் இடர்பாடுகளுக்குள் கிட்டத்தட்ட 1,700 மாணவர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.
சிஞ்சுவான் மாகாணத்தில் மாத்திரம் இரண்டு லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளன.
எப்பகுதியைத் தோண்டினாலும் உடல்களே வந்து வந்து குவிகின்றன.
பாடசாலைக் கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து தமது பிள்ளைகளோ சகோதரர்களோ திரும்பி வருவார்களாவென எதிர்பார்த்தபடி பெற்றோர்களும் உறவினர்களும் இன்னமும் காத்திருக்கின்றனர்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் சீனா வெளிநாட்டு உதவிகளுக்கோ ஊடகங்களுக்கோ எந்தவிதமான மறுப்புகளையும் வெளிப்படுத்தாமல் அங்கு என்ன நடக்கின்றதென்பதை வெளி உலகிற்கு காட்டுகின்றது.
அத்துடன், வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் என சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
மியன்மாருடன் ஒப்பிடுகையில் சீனா இவ் அனர்த்தத்தின்போது கையாண்ட அணுகுமுறை வித்தியாசமானதாகவே உள்ளது.
பிறநாடுகளிலிருந்து அவசர உதவிகளும் மீட்புப் பணியாளர்களும் சீனாவுக்கு வந்துள்ள அதேசமயம், காயமடைந்த மக்களுக்கு தேவையான இரத்தமும் வெளிநாட்டு நலன்விரும்பிகளால் வழங்கப்பட்டு சீனாவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.
தாய்வானிலிருந்து மாத்திரம் 150 தொன் உதவிப் பொருட்கள் இரண்டு சரக்கு விமானங்களில் சீனாவை வந்தடைந்துள்ளன.
அவசர உதவிகள் நேரடியாகவே மக்களைச் சென்றடையும் வகையில் சீன அரசு ஏற்பாடு செய்துள்ளது.
பொருளாதார ரீதியாகவும் சீனாவில் பாரிய இழப்பு ஏற்பட்டுள்ள அதேசமயம், அநாதைகள் ஆக்கப்பட்டுள்ள பலரின் நிலை கேள்விக்குறியாகிவிட்டது.
பெற்றோர்களைத் தேடும் பிள்ளையும் பிள்ளையைத் தேடும் பெற்றோருமாக எங்கும் அழுகுரல்களே கேட்ட வண்ணமிருக்கின்றன.
எவருமே எவருக்கும் ஆறுதல் சொல்ல முடியாத நிலையில் நடைப்பிணங்களாய் தமது உறவுகள் வருவார்களா என கட்டிட இடிபாடுகளை நோக்கியும் இறந்தவர்களின் உடல்களை திறந்து பார்க்கத் தெரியாதவர்களாகவும் அலைந்து திரியும் கோரக்காட்சிகள்....
ஆரம்பப் பாடசாலை ஒன்றின் பிஞ்சுகள் பிணங்களாக பெற்றோர்களின் கைகளில்.
பள்ளிக்குச் சென்ற பிள்ளை பிணமாகத் திரும்புமென எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது.
இன்னமும் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கித் தவிக்கும் குழந்தைகளை மீட்புப் பணியாளர்கள் தம்முயிரை பணயமாக வைத்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்காக வெளி உலகமே சீனாவை உற்றுநோக்கிக் கொண்டிருந்தவேளை தற்பொழுது அனைத்துத் தரப்பினரின் பார்வையை மேலும் வலுவடையச் செய்திருக்கின்றது சீனாவில் ஏற்பட்டுள்ள இப்பூகம்பம்.
இவ்வாறான இயற்கைப் பேரழிவுகள் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு வடிவங்களில் பல இலட்சக்கணக்கான உயிர்களைக் காவுகொள்வது அதிகரித்திருப்பது நிச்சயமாக உலகின் இருப்பை சந்தேகத்திற்குள்ளாக்கியுள்ளமையை எவராலும் மறுக்க முடியாது.
யோ.நிமல்ராஜ்