ஜனநாயக ஆட்சிக்காக ஒன்றிணையுங்கள்

பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் அந்நாட்டின் ஜனநாயக ஆட்சிக்கு வழிகோலுமா?

பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் அந்நாட்டின் ஜனநாயக ஆட்சிக்கு வழிகோலுமா?

பாகிஸ்தானில் ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்காக பல நூற்றுக்கணக்கான உயிர்களை பலியாகக் கொடுத்து நடைபெற்று முடிந்த தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சி வெற்றி பெற்றுள்ளமை அங்கு மீண்டும் ஜனநாயக ஆட்சி பரிணமிக்குமா என்ற கேள்வியைப் பிறப்பித்துள்ளது.


கடந்த ஜனவரி எட்டாம் திகதி நடைபெறவிருந்த இப்பொதுத் தேர்தல் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மறைவைத் தொடர்ந்து அங்கு நிலவிய அசாதாரண சூழ்நிலையின் காரணமாக பெப்ரவரி 18 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டு நடைபெற்று முடிந்துள்ளது.

பாகிஸ்தானின் இராணுவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டுமென்ற நல்லெண்ணத்துடன் எட்டுவருட அஞ்ஞாதவாச நிறைவில் நாடு திரும்பிய பெனாசிர் பூட்டோவின் வரவேற்பு ஊர்வலத்தில் நடந்த குண்டு வெடிப்பின் போதே 165 க்கும் அதிகமானோர் பலியானதுடன் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

இந்நிலையிலும் பாகிஸ்தானில் மக்களாட்சி மலர வேண்டுமென்பதற்காக தனது இறுதி மூச்சுவரை தீவிர தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டிருந்தார் பெனாசிர் பூட்டோ.

மறுபுறம் மற்றொரு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் நாடு திருப்பமும் அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு இடையூறாக பாகிஸ்தான் நீதிமன்றங்களால் விடுக்கப்பட்ட தடைகளும் தடை நீக்கங்களும் .

இடையில் பாகிஸ்தானில் அவசரகால நிலையைப் பிறப்பித்து தனக்கெதிராக செயற்பட்டவர்களையோ அல்லது கருத்துக் கூறியவர்களையோ வீட்டுக்காவலிலோ சிறைகளிலோ இராணுவக் கரம் கொண்டு அடைத்தார் ஜனாதிபதி முஷாரப்.

இதேவேளை , உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதவிநீக்கமும் நடைபெறத் தவறவில்லை.

பதவியிலிருந்த நீதிபதிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுத் தனக்கு ஆதரவானவர்கள் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டார்கள்.

இந்நிலையில் ஜனாதிபதி முஷாரப்பின் இச்செயற்பாடுகளுக்கு சில உலகநாடுகளும் தமது ஆதரவை வெளிக்காட்டிக் கொண்டிருந்தமை ஜனாதிபதி முஷாரப்பிற்கு மேலும் மேலும் தனது செயற்பாடுகளை தீவிரப்படுத்த ஏதுவான காரணமாயிற்று.

இந்நிலையிலும், அவசரகாலநிலையை இரத்துச் செய்யக்கோரும் அழுத்தம் பொருந்திய கடிதங்களை சில நாடுகள் அனுப்பினாலும் அவை கானல் கடிதங்களாகவே அமைந்தன.

பாகிஸ்தான் இராணுவ அரசின் இச்செயற்பாட்டின் காரணமாக பொதுநலவாய அமைப்புகளிலிருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டமை தான் இராணுவ ஆட்சிக்குக் கிடைத்த விருதாகும்.

பெனாசிரின் மறைவினைத் தொடர்ந்து பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக அவரது மகன் பிலாவல் பூட்டோவும் இணைத் தலைவராக அவரது கணவர் ஆசிப் அலி சர்தாரியும் நியமிக்கப்பட்டு தேர்தல் பிரசாரங்கள் தொடர்ந்தன.

பெனாசிர் பூட்டோவின் படுகொலை அதையடுத்து நடந்த வன்முறைகள் மற்றும் தீவிரவாத இயக்கங்களின் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் போன்றவற்றால் அரசியல்வாதிகளும் பொதுமக்களும் அச்சமடைந்தனர்.

இவ்வாறான சூழ்நிலையில் மந்தமாக இருந்த தேர்தல் பிரசார நடவடிக்கைகள் பெரும்பாலும் தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணையத் தள சேவைகள் போன்றவற்றாலேயே நிகழ்த்த வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டது.

இதேநேரம், தேர்தல் நீதியாகவும், சுயாதீனமாகவும் நடத்தப்படுமென தேர்தல் ஆணையாளர் நாயகம் இடையிடையே உறுதி அளித்துக் கொண்டிருந்தாலும் தேர்தல் வாக்களிப்பின் போது மோசடி , கள்ளவாக்குகள் இடம்பெறுமென மக்கள் எதிர்பார்த்தனர்.

இவ்வாறனதொரு சூழ்நிலையில் கடந்த 18 ஆம் திகதி வன்முறைச் சம்பவங்களுக்கு மத்தியில் நடந்த தேர்தலில் மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மக்கள் கட்சியும் மற்றொரு முன்னாள் பிரதமர் நவாஷ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியும் பெரும்பான்மை ஆசனங்களில் வெற்றியீட்டியுள்ள அதேவேளை ஜனாதிபதி முஷாரபின் ஆளுங்கட்சி மோசமான தோல்வியைத் தழுவியுள்ளது.

இவ்விரு கட்சிகளினதும் பெருவெற்றியானது ஒரு சில வல்லரசு நாடுகளின் மிக நெருங்கிய நண்பனான முஷாரபின் எட்டு வருட இராணுவ ஆட்சிக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

பெனாசிர் பூட்டோவின் கணவர் சர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் நவாஷ் ஷரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) கட்சி ஆகியன இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

இதற்காக பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு இவ்விரு கட்சிகளும் தொடர்ந்து முஷாரப் அரசை வலியுறுத்தி வருகின்றன.

ஆனால், இவ்விரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துவிட்டால் முஷாரப்புக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படலாமென பலராலும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையிலும் இத்தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ளாத முஷாரப்பால் மீளவும் ஒரு தேர்தல் நடத்தலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால், வாக்குப்பதிவு குறைவாக இருக்கின்ற காரணத்தைக் கொண்டு இத்தேர்தலை செல்லாது என்று அறிவிக்க சட்டத்தில் இடம் இல்லை என்றும் மறுதேர்தலுக்கு வாய்ப்பு இல்லை என்றும் தலைமைத் தேர்தல் ஆணையாளர் காஜி முஹம்மது பாருக் தெரிவித்துள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டு போன்ற காரணங்களால் நாட்டுக்கு வெளியே வாழும் பெனாசிர் மற்றும் அவரது கணவர் சர்தாரி ஆகியோர் பாகிஸ்தான் திரும்பினால் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுமென்று முஷாரப்பால் கூறப்பட்டு அதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

இத்தகைய பொதுமன்னிப்பு பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டது. ஆனால் இதேபோன்று குற்றச்சாட்டுகளில் சிக்கிய நவாஷ் ஷெரீப்புக்கு இத்தகைய பொதுமன்னிப்பு வழங்கப்படவில்லை.

இதனால் அப்போது நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை பாகிஸ்தான் மக்கள் கட்சி புறக்கணிக்கவில்லை.

இதன் மூலம் முஷாரப் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டமையை பாகிஸ்தான் மக்கள் கட்சி மறைமுகமாக அங்கீகரித்தது.

இந்நிலையில் பொதுமன்னிப்பு வழங்குவதாக முஷாரப் பிறப்பித்த ஆணை கடந்த மாதத்துடன் காலாவதியாவிட்டது.

இந்நிலையிலும் முஷாரப் பிறப்பித்த ஆணைகள் காலாவதியாகவில்லை என்றும் பாகிஸ்தான் காபந்து அரசு தெரிவித்துள்ளது.

இருந்தாலும் முஷாரப்பை பதவிவிலகக்கோரி நவாஷ் ஷரீப் திட்டவட்டமாக வலியுறுத்தினாலும் பாகிஸ்தான் மக்கள் கட்சி அதனை அவ்வளவாக வற்புறுத்தாமல் உள்ள நிலைமை அவர்களும் முஷாரப்பின் பிடிக்குள் சோடை போய்விட்டார்களாவென எண்ணத்தோன்றுகின்றது.

ஆனால் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ மற்றும் அவரது கணவர் ஆசிப் அலி சர்தாரி ஆகியோருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இது பாகிஸ்தானில் ஜனநாயக ஆட்சியின் கீழ்தான் நீதிமன்றங்கள் இயங்குகின்றன என்பதனை சந்தேகிக்க வைக்கின்றது.

இதேவேளை முஷாரப்பின் மிகநெருங்கிய நண்பரும் தற்போதைய பாகிஸ்தான் இராணுவத் தளபதியுமான கியானி, பாகிஸ்தானின் அரசிலிருந்து அந்நாட்டு இராணுவம் பிரிந்து தனியாகச் செயல்படவேண்டுமென தெரிவித்துள்ளார்.

அத்துடன் இராணுவத்திலிருந்து நிர்வாகக் கடமைகளிற்குச் சென்ற இராணுவ அதிகாரிகளையும் உடனடியாக அவற்றிலிருந்து விலகி மீண்டும் இராணுவத்திற்கு வரவேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

தன்னால் நியமிக்கப்பட்ட நீதிபதிகளும் தனது நெருங்கிய நண்பனும் கடந்த ஆண்டு அவசரகால நிலையின்போது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட கியானியும் தனக்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பது முஷாரப்பை மேலும் சோதனைக்குரிய காலமாக்கிவிட்டது.

இந்நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சில முஷாரப் பதவி விலகி அங்கு ஜனநாயக ஆட்சி மலர வழிவிட வேண்டுமென வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையின் அமெரிக்க உளவுத்துறையின் கருத்துப்படி முஷாரப் பதவி விலகுவதே நல்லதென அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாகிஸ்தான் ஜனாதிபதி பதவியிலிருந்து முஷாரப் பதவி விலகினால் மட்டுமே புதிய அமைச்சரவையில் சேருவேன் என்றும் பாகிஸ்தான் ஜனநாயகத்தை வலுப்படுத்த புதிய ஜனாதிபதி தேவை என்றும் நீதிபதிகளை பணியிருந்து நீக்கியும் அவசர காலநிலையின் கீழ் முக்கியமான அரசியல் பிரமுகர்களை வீட்டுக்காவலில் வைத்தவருமான முஷாரப் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசில் இடம்பெறுவது முறையல்லவெனத் தெரிவித்துள்ளார், முன்னாள் பிரதமர் நவாஷ் ஷரீப்.

முஷாரப்பின் இராணுவ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வரப்போகின்றதென்பது முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் வரவேற்பு ஊர்வலத்திற்கு பெருந்திரளான மக்கள் வருகை தந்தபோதே நிச்சயமாகிவிட்டதெனலாம்.

ஆனாலும் நடைபெற்று முடிந்த தேர்தலில் முஷாரப் கண்ட பெருந்தோல்வி சர்வதேச நாடுகளின் அழுத்தம் போன்ற காரணங்களால் செய்வதறியாது தடுமாறுகின்றார் முஷாரப்.

இவ்வேளையிலும் பாகிஸ்தான் மக்கள் கட்சி முஷாரப்பிற்கு எதிராக பலத்த கண்டனங்களையோ எதிர்ப்பார்ப்புகளையோ வெளிக்காட்டுவதாக இல்லை.

பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில் என்றுமில்லாதவாறு அந்நாட்டின் அரசியல் வாதிகளால் இருபதாயிரம் கோடி ரூபா தேர்தல் நடவடிக்கைகளின் போது செலவிடப்பட்டுள்ளதுடன் இவை அனைத்திற்கும் எந்தவிதமான கணக்குகளும் இல்லையென்றும் கூறப்பட்டுள்ளது.

தனது அறுபது ஆண்டுகால சுதந்திரப் பயணத்தில் இருபத்தைந்து ஆண்டுகள் மட்டுமே ஜனநாயகப் பாதையில் நடந்த பாகிஸ்தானிற்கு தற்போது நடைபெற்று முடிந்துள்ள தேர்தலும், அதில் பாகிஸ்தான் மக்கள் கட்சி பெற்றுள்ள வெற்றியும், பாகிஸ்தான் ஜனநாயகத்திற்காக தம்முயிரை அர்ப்பணித்துக்கொண்டிருக்கும் பூட்டோ குடும்பத்தின் ஜனநாயகக் கனவுகளும் பலித்து பாகிஸ்தானின் இராணுவ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து மீண்டும் ஜனநாயகப் பாதையில் அந்நாடு காலடி எடுத்து வைக்குமா?

-யோ.நிமல்ராஜ்-
நன்றி : ஞாயிறு தினக்குரல் 02.03.2008